பத்மினி ஏகாதசி: குழந்தை பாக்கியம் தரும் விரதம்

பெருமாளின் அருளைப் பெற உகந்த விரதங்களில் முதன்மையானதாகக் கருதப்படும் ஏகாதசி விரதம், செல்வச் செழிப்பையும் வாழ்விற்குப் பின் மோட்சத்தையும் அருளும் என்பது ஐதீகம். மாதத்திற்கு இரண்டு முறை வரும் ஏகாதசிகளில், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் அதிக மாதத்தில் வரும் ஏகாதசி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதற்கு பத்மினி ஏகாதசி என்று பெயர். கமலா ஏகாதசி, அதிக ஏகாதசி, புருஷோத்தம ஏகாதசி போன்ற பெயர்களாலும் இது அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசியன்று விரதம் இருந்து பகவானை வழிபட்டால், அதிக புண்ணியங்கள் கிடைக்கும்.

பத்மினி ஏகாதசியில் விரதம் இருப்பது, பல ஆண்டுகள் தவம் மற்றும் யாகங்கள் செய்ததற்கு இணையான பலனைத் தரும் என பத்ம புராணம் கூறுகிறது. ஸ்கந்த புராணத்தின்படி, அஸ்வமேத யாகம் செய்ததற்கு இணையான பலனை இந்த விரதம் அளிக்கும். இது பாவங்களை நீக்குவதுடன், முக்தியையும் அருளக் கூடியது. குறிப்பாக, குழந்தைப்பேறு வேண்டி விரதம் இருப்பவர்களுக்கு இது மிக அற்புதமான பலனைத் தரக்கூடிய நாளாகும்.

இந்த விரதத்தின் மகிமைகள் குறித்து பகவான் கிருஷ்ணர் யுதிஷ்டிரரிடம் விளக்கமாக கூறியுள்ளார். 'இந்த ஏகாதசி மற்ற ஏகாதசிகள் போன்று கிடையாது. பிரம்மதேவரால்கூட இதன் சிறப்பை முழுமையாக விவரிக்க முடியாது. இந்த ஏகாதசி விரதம் கடைப்பிடிக்கும் பக்தர்களுக்கு எனது மிகச்சிறந்த கருணை நிச்சயம் கிடைக்கும். அவர்கள் எனது முழுமையான கருணை மற்றும் திருவருளுக்கு பாத்திரமாகிறார்கள்' என கிருஷ்ணர் தெரிவித்தார்.

விரத முறைப்படி, பக்தர்கள் முழு விரதம் இருக்க வேண்டும். தானியங்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். முழு விரதம் இருக்க முடியாதவர்கள், பசும்பால் மற்றும் தண்ணீர் அருந்தி விரதத்தை கடைப்பிடிக்கலாம். முந்தைய நாளான தசமி தினத்தில் இருந்தே விரதத்தைத் தொடங்க வேண்டும். தசமி அன்று சூரிய அஸ்தமனத்திற்கு முன்னதாகவே உணவை முடித்துவிட வேண்டும். மறுநாள் ஏகாதசியன்று அதிகாலை நீராடி, பூஜை செய்ய வேண்டும். துவாதசியன்று காலையில் நீராடி, நிவேதனம் செய்து பிரசாதம் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும் என கிருஷ்ணர் வழிகாட்டுகிறார்.

பத்மினி ஏகாதசியின் சிறப்பு குறித்து புலஸ்திய முனிவர், நாரதருக்கு கூறியதையும் கிருஷ்ணர் நினைவுகூர்ந்தார். சக்தி வாய்ந்த ராவணன், மன்னர் கார்த்தவீரியார்ஜுனனிடம் தோற்றதற்குக் காரணம், கார்த்தவீரியாஜுனனின் தாயான பத்மினி தேவி, அதிக மாதத்தில் ஏகாதசி விரதம் இருந்து பகவானை வழிபட்டதே என்று புலஸ்திய முனிவர் விளக்கினார். பத்மினி தேவி ஏகாதசி விரதம் இருந்து பகவானின் அருளால் பெற்றெடுத்த குழந்தை என்பதால் கார்த்தவீரியாஜுனன் அதிக சக்தி கொண்டிருந்தான். இதனால், பக்தி மட்டுமல்ல பௌதிக விஷயங்களிலும் வெற்றியை கொடுக்கக்கூடிய பத்மினி ஏகாதசி நாளை (27.5.2026) கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து பகவானை மனதார வழிபட்டால், பகவானின் அருள் கிடைப்பதுடன், பக்தியில் உள்ள தடைகளும் நீங்கும்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version