ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவிற்கு செல்லும் விமானங்களின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கொண்டாடப்படுகிறது. திருவோணம் பண்டிகை வரும் 26 ஆம் தேதி புதன்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் கொண்டாடுவது போல, கேரள மக்களுக்கு ஓணம் பண்டிகை மிக முக்கியமானதாகும். இந்த பண்டிகையை தங்கள் சொந்த ஊர்களில் குடும்பத்தினருடனும் உறவினர்களுடனும் கொண்டாடுவது வழக்கம்.
இதனால், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் கேரள மக்கள் பண்டிகையை கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் வசிக்கும் கேரள மக்கள், ஓணம் பண்டிகையை கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுள்ளனர். இதற்காக சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ரயில் மற்றும் பேருந்துகளில் பயண நேரம் அதிகமாக இருக்கும் என்பதால், பலர் விமானம் மூலம் கேரளா செல்ல விரும்புகின்றனர். சனி, ஞாயிறு விடுமுறை நாட்களுடன் சேர்த்து ஓணம் பண்டிகையை கொண்டாட, இன்று சனிக்கிழமையே பலர் சென்னை விமான நிலையத்தில் இருந்து கொச்சி, திருவனந்தபுரம், கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய இடங்களுக்கு விமான பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.
கேரள மாநில மக்கள் அதிகளவில் விமானங்களில் சொந்த ஊர்களுக்கு திரும்புவதால், சென்னையில் இருந்து கேரளாவின் முக்கிய நகரங்களுக்கு செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இதன் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் இருந்து கேரளா செல்லும் விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.
வழக்கமாக சென்னை – கொச்சி விமான கட்டணம் ரூ.5,336 ஆக இருக்கும் நிலையில், இன்று அது ரூ.14,843 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், சென்னை – திருவனந்தபுரம் விமான கட்டணம் வழக்கமாக ரூ.5,853 ஆக இருக்கும் நிலையில், இன்று ரூ.14,700 ஆக அதிகரித்துள்ளது. சென்னை – கோழிக்கோடு விமான கட்டணம் ரூ.6,158 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.17,678 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், சென்னை – கண்ணூர் விமான கட்டணம் ரூ.5,655 ஆக இருந்த நிலையில், இன்று ரூ.12,270 ஆக உயர்ந்துள்ளது. கண்ணூருக்கு கொச்சி வழியாக செல்வதற்கான கட்டணம் ரூ.21,694 ஆக உள்ளது. இவ்வாறு விமான டிக்கெட் கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளதால் பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

