ஓமன் கடல் பகுதியில் கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற கப்பல் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானில் இருந்து புஜைராவுக்கு எண்ணெய் ஏற்றிச் சென்ற MT Settebello கப்பல் மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்ததாக இந்திய அரசு அறிவித்துள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில், கப்பலில் இருந்து வந்த அவசர அழைப்பின் பேரில் ஓமன் கடற்படை உடனடியாக செயல்பட்டு, 21 இந்திய மாலுமிகளை பத்திரமாக மீட்டுள்ளது. இருப்பினும், காணாமல் போன மூவர் அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்தது தற்போது தெரிய வந்துள்ளது. உயிரிழந்தவர்களில் 23 வயது கடற்படை வீரர் ஆதித்ய ஷர்மாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வாரத்தில் மட்டும் இந்திய ஊழியர்களைக் கொண்ட மூன்று கப்பல்கள் மீது அமெரிக்க கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது. ஓமன் கடற்கரை அருகே இந்தியக் குழுவினர் இருந்த கப்பல் மீது இரண்டு 'ஹெல்ஃபயர்' (Hellfire) ஏவுகணைகளைச் செலுத்தியதை அமெரிக்க மத்தியக் கட்டளை மையம் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த சம்பவங்களுக்கு பிரதமர் மோடி இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
அமெரிக்காவின் இந்த திடீர் தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இந்திய மாலுமிகள் உயிரிழந்தது இந்திய அரசுக்கு பெரும் கவலையை அளித்துள்ளது. இது குறித்த மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.