தமிழக வெற்றிக்கழகம் தலைமையிலான புதிய அரசு கடந்த மாதம் 10-ஆம் தேதி பதவியேற்றது. இதில், முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர். அமைச்சரவை விரிவாக்கத்திற்குப் பிறகு, துறைகள் ஒதுக்கப்படாத நிலையில், கடந்த வாரமே இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன. இன்று, தலைமைச் செயலகத்தில் உள்ள தங்களது அறைகளில் அமைச்சர்கள் பொறுப்பேற்று பணிகளைத் தொடங்கினர்.
அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்று, தனது பணிகளைக் கவனிக்கத் தொடங்கினார். அவரைத் தொடர்ந்து, பொதுப்பணித்துறை அமைச்சராக செங்கோட்டையனும் பொறுப்பேற்றார். இந்த நிகழ்வின்போது, முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் வந்து செங்கோட்டையனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
அதேபோல், அமைச்சர் புஸ்சி ஆனந்த் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். அப்போது, முதலமைச்சர் விஜய் நேரில் வந்து, அமைச்சர் ஆனந்தை இருக்கையில் அமரவைத்து வாழ்த்தியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. சுகாதாரத்துறை அமைச்சராக அருண்ராஜ், உணவுத்துறை அமைச்சராக வெங்கட் ரமணன், மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சராக நிர்மல் குமார், பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக ராஜ்மோகன், கனிம வளத்துறை அமைச்சராக டி.கே.பிரபு, மற்றும் தொழில்துறை அமைச்சராக கீர்த்தனா ஆகியோரும் இன்று அவரவர் அறைகளில் பொறுப்பேற்று பணிகளைத் தொடங்கினர்.
புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்ட அனைத்து அமைச்சர்களுக்கும், அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகள் நேரில் வந்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். புதிய அரசின் பணிகளைத் தொடங்குவதில் அமைச்சர்கள் உற்சாகத்துடன் ஈடுபட்டுள்ளனர்.

