புதிய பாடத்திட்டம்: 9 புத்தகங்களை வெளியிட்ட அமைச்சர் ராஜ் மோகன்!

சென்னை: தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் தலைமையில், இன்று (18.05.2026) நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், ஒன்று, இரண்டு மற்றும் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒன்பது பாடப் புத்தகங்கள் வெளியிடப்பட்டன. இந்த பாடநூல்கள், மாணவர்கள் எளிதாகப் புரிந்து கற்கவும், அவர்களின் தனித்திறன்களை வளர்க்கவும், எதிர்பார்க்கப்படும் கற்றல் விளைவுகளை அடையவும் வகை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

குழந்தை மையக் கற்றல் அணுகுமுறையை ஊக்குவிக்கும் வகையில், பாடநூல்கள் மாணவர்களால் மிகவும் விரும்பப்படும் கதைகள், பாடல்கள் மற்றும் கற்றல் செயல்பாடுகளை உள்ளடக்கியுள்ளன. இவை மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதோடு, அவர்களின் உடல் இயக்கத் திறன்கள், சமூக மனவெழுச்சித் திறன்கள், விழுமியங்கள் மற்றும் வாழ்க்கை திறன்களையும் வளர்க்கும் வகையில் வண்ணமயமான வடிவமைப்புகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளன.

மேலும், 2026-27ஆம் கல்வி ஆண்டு முதல், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 1, 2026 அன்று திறக்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார். பள்ளி திறக்கும் நாளன்றே, 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் தேவையான பாடநூல்கள் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தால் அச்சிடப்பட்டு, மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். புதிய பாடப் புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்படுவதையொட்டி, 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு புதிய பாடநூல் மற்றும் கற்பித்தல் நுட்பங்கள் குறித்த பயிற்சி ஜூன் 1 முதல் ஜூன் 3, 2026 வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், அனைத்துப் பள்ளிகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தும் அமைச்சர் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். விலையில்லா நலத்திட்டங்கள் (பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகள், சீருடை, புத்தக பைகள்) மாணவர்கள் அனைவருக்கும் பள்ளி திறக்கும் நாளன்றே கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், பள்ளி வளாகம், வகுப்பறைகள், ஆய்வகங்கள், குடிநீர் வசதி, கழிப்பறைகள் ஆகியவை தூய்மையாகவும், மாணவர்களின் பாதுகாப்பிற்கு ஏற்ற வகையிலும் பராமரிக்கப்பட வேண்டும். EMIS வழியாக மாற்றுச் சான்றிதழ்கள் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்றும், மாணவ, மாணவியர் சேர்க்கை மற்றும் பள்ளி வளாகத்தில் பெண்குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version