சென்னையின் சூளைமேடு பகுதியில் வசித்து வந்த நேபாள வாலிபர் ஒருவர், பக்கத்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூளைமேடு பகுதியில் வசிக்கும் நேபாள நாட்டைச் சேர்ந்த கேஷப் குமார் போகடி என்ற வாலிபர், தனது காதலியின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளார். போதை தலைக்கேறிய நிலையில், அருகில் இருந்த பக்கத்து வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார்.
அந்த வீட்டில் அசந்து தூங்கிக் கொண்டிருந்த 48 வயது மதிக்கத்தக்க பெண்மணிக்கு, கேஷப் குமார் போகடி பாலியல் ரீதியாக கடும் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், உயிருக்குப் பயந்து அலறிக் கூச்சலிட்டுள்ளார்.
பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு உடனடியாக ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் பொதுமக்கள், போதையில் இருந்த அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக சூளைமேடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சூளைமேடு காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நேபாள வாலிபர் கேஷப் குமார் போகடியை கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் பாதுகாப்பு குறித்து மீண்டும் ஒருமுறை கேள்வி எழுப்பியுள்ளது.

