கோவை கோனியம்மன் கோவிலில் உண்டியல் பணத்தை கையாடல் செய்ததாக நான்கு ஊழியர்கள் மீது பரபரப்பு புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை விசாரணை நடத்தி, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோனியம்மன் கோவில் வளாகத்தில் மொத்தம் 16 உண்டியல்கள் பக்தர்களின் காணிக்கைக்காக வைக்கப்பட்டுள்ளன. இதில் 9 நிரந்தர உண்டியல்களும், தேர் திருவிழாவை முன்னிட்டு வைக்கப்பட்ட 6 தற்காலிக உண்டியல்களும் அடங்கும். மேலும், திருப்பணிக்காக பக்தர்களிடம் நன்கொடை வசூலிக்க ஒரு உண்டியலும் உள்ளது.
கடந்த 15 ஆம் தேதி காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை, அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல்களில் உள்ள காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இந்த பணியின் போது, ஒரு உண்டியலில் இருந்த பணத்தை எடுக்காமல், ஏற்கனவே எண்ணப்பட்ட உண்டியல்களுடன் மறைத்து வைத்துள்ளனர். இந்த முறைகேட்டை அதிகாரிகள் கவனிக்கவில்லை.
தற்காலிக உண்டியல்களை டிராலியில் எடுத்துச் செல்லும் போது, கலையரங்கத்துக்கு பின்புறம் ஒரு ஊழியர் உண்டியலில் இருந்த பணத்தை எடுத்து தனது பையில் மறைத்து வைப்பதை ஒரு பக்தர் நேரில் பார்த்துள்ளார். உடனடியாக அவர் இது குறித்து சென்னையில் உள்ள அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, கோவில் வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில், சீட்டு விற்பனையாளர் பாலசுப்ரமணியன், அலுவலக உதவியாளர் சரவணன், திருவலகு பிரதீப்குமார், மற்றும் பூசாரி கிருஷ்ணராஜ் ஆகியோர் சேர்ந்து ஒரு உண்டியலை மறைத்து வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமேஷ் குமார் இது குறித்து விசாரணை நடத்தினார். விசாரணையில், உண்டியல் பணத்தை பாலசுப்ரமணியன் தனது வீட்டிற்கு எடுத்துச் சென்றதாகவும், அதில் சுமார் ரூ.31,000 இருந்ததாகவும், பின்னர் அந்த தொகையை நான்கு பேரும் பிரித்துக் கொண்டதாகவும் ஒப்புக்கொண்டனர்.
குற்றத்தை ஒப்புக்கொண்டதால், சம்பந்தப்பட்ட நான்கு ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க, கோவில் செயல் அலுவலர் குமார் உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்பட்ட பிறகு, துறை ரீதியான மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

