நெல்லை இரட்டை கொலை: தவெக அரசை வானதி சீனிவாசன் கடுமையாக விமர்சித்தார்

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை மற்றும் அவரது 5 வயது மகன் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டதும், மற்றொரு மகன் படுகாயங்களுடன் மீட்கப்பட்டதும் நெஞ்சைப் பதைபதைக்க வைப்பதாக பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், "அந்த பிஞ்சுக் குழந்தைகளின் எதிர்காலக் கனவுகள் சிதைக்கப்பட்டு இன்று சமூக விரோதிகளின் கொலைப்பசிக்கு ஆளாகி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிவின் உச்சகட்டமாக இன்று ஓர் குடும்பமே அழிந்திருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பழிக்குப் பழி சம்பவங்கள், முன்விரோத சம்பவங்களால் இரத்த ஆறு ஓடுவது சட்டம் ஒழுங்கில் தவெக அரசின் நிர்வாகத் தோல்விக்கு மற்றுமோர் ரத்த சாட்சி என வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார். சட்டம் – ஒழுங்கினைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையின் அலட்சியப் போக்கால் தென்மாவட்டங்கள் சமூக விரோதிகளின் கூடாரங்களாக மாறி கொடூரக் கொலைகளை அரங்கேற்றும் இடங்களாக உருவாகியிருப்பது வேதனை அளிப்பதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

தினந்தோறும் இத்தனை கொலைகள், குற்றங்கள் நடைபெறுவதைக் கண்டு சட்டம் ஒழுங்கினை வலுப்படுத்த வேண்டிய முதல்வர், அதனை விட்டுவிட்டு தனது கூட்டணியை வலுப்படுத்துவதிலேயே குறியாக இருக்கிறார் என வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். "அந்தச் சிறுவர்களின் மரண ஓலங்கள் உங்கள் காதுகளில் விழவில்லையா முதல்வர் விஜய்?" என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஈவு இரக்கமற்ற முறையில் இத்தகைய படுபாதகச் செயலைப் புரிந்த குற்றவாளிகளை விரைவில் கைது செய்து கடும் தண்டனை பெற்றுத் தர காவல்துறையை வலியுறுத்துவதாக வானதி சீனிவாசன் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version