மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேசிய தேர்வு முகமை (NTA) மே 3 அன்று நடைபெற்ற தேர்வை ரத்து செய்ததை அடுத்து, சிபிஐ இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது. விசாரணையில், தேர்வு தொடங்குவதற்கு சுமார் 45 மணி நேரத்திற்கு முன்பே வினாத்தாள்கள் கசிந்துள்ளது தெரியவந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் சிக்காரைச் சேர்ந்த ஒரு மாணவர், 'Guess Paper' என்ற பெயரில் தனது தந்தைக்கு PDF வடிவில் அனுப்பியதன் மூலம் இந்த முறைகேடு முதலில் வெளிச்சத்திற்கு வந்தது. தேர்வு முடிந்த பிறகு, இந்த 'Guess Paper' மற்றும் உண்மையான வினாத்தாளை ஒப்பிட்டுப் பார்த்தபோது, வேதியியலில் 45 கேள்விகளும், உயிரியலில் 90 கேள்விகளும் அப்படியே இருந்ததை கண்டு ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், உளவுத்துறை தலையிட்டு ராஜஸ்தான் சிறப்பு அதிரடிப் படையுடன் இணைந்து விசாரணையைத் தொடங்கியது. தற்போது சிபிஐ அதிகாரிகளும் இந்த விசாரணையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மகாராஷ்டிராவின் நாசிக்கில் தொடங்கிய இந்த வினாத்தாள் கசிவு, ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களுக்குப் பரவியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த மோசடியின் முக்கிய சூத்திரதாரியாகக் கருதப்படும் நாசிக்கைச் சேர்ந்த சுபம் கைர்னார் (30), ஆயுர்வேத மாணவர் ஆவார். புனேவைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து வினாத்தாளை 10 லட்சம் ரூபாய்க்கு வாங்கி, அதை ஹரியானாவைச் சேர்ந்த ஒருவருக்கு 15 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளார். இந்தத் தகவல்கள் அனைத்தும் என்க்ரிப்ட் செய்யப்பட்ட மெசேஜிங் செயலிகள், போர்ட்டபிள் ஸ்கேனர்கள், டெலிகிராம் நெட்வொர்க்குகள் மற்றும் ஷேடோ சர்வர்கள் மூலம் பரிமாறப்பட்டுள்ளன.
கைதில் இருந்து தப்பிக்க தனது அடையாளத்தை மாற்றிக்கொண்டு, தலைமுடியைக் குறைத்துக்கொண்ட சுபம் கைர்னார், ஒரு கோவிலுக்குச் சென்றபோது சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வினாத்தாள் கசிவு வலையமைப்பின் முக்கிய மூளைகளாகக் கருதப்படும் மனிஷ் யாதவ் மற்றும் ராகேஷ் மாண்ட்வாரியா ஆகியோரும் இதில் அடங்குவர். குறிப்பாக, கேரளாவில் 200 மாணவர்களுக்கு வினாத்தாள் அனுப்பப்பட்டதைக் கண்டறிந்த சிபிஐ, அங்கு சென்று விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளது.