இந்தியாவின் 79வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தேசியக் கொடியை ஏற்றும்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் செய்யக்கூடாத தவறுகள் குறித்து பலருக்கும் முழுமையாகத் தெரியவில்லை. இதுகுறித்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
தேசியக் கொடி என்பது காவி, வெள்ளை, பச்சை ஆகிய மூன்று வண்ணங்களையும், நடுவில் நீல நிறத்தில் 24 ஆரங்களைக் கொண்ட அசோகச் சக்கரத்தையும் கொண்டுள்ளது. கொடியை ஏற்றும்போது, காவி நிறம் மேலாகவும், பச்சை நிறம் கீழாகவும் இருக்க வேண்டும். கொடியை தலைகீழாக ஏற்றுவது அவமரியாதைக்குரிய செயலாகும். சில சமயங்களில், காங்கிரஸ் கட்சியின் கொடியின் வடிவமைப்பும் தேசியக் கொடியின் வடிவமைப்பும் ஒரே மாதிரி இருப்பதால், கொடியை மாற்றி ஏற்றும் சம்பவங்களும் நிகழலாம். எனவே, இது தேசியக் கொடிதான் என்பதை உறுதி செய்த பின்னரே ஏற்ற வேண்டும்.
மேலும், ஒன்றிய உள்துறை அமைச்சகம் பிளாஸ்டிக்கில் செய்யப்பட்ட தேசியக் கொடிகளைப் பயன்படுத்தக் கூடாது என்றும், இதுகுறித்து மின்னணு மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது. காகிதத் தாள்களைப் போல பிளாஸ்டிக் உடனடியாக மட்கும் பொருள் இல்லை என்பதால், தேசியக் கொடியின் கண்ணியத்தைக் காப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் எழுகின்றன.
தேசியக் கொடி அவமதிப்பு தடுப்புச் சட்டம் 1971, பிரிவு 2-ன் படி, தேசியக் கொடியை இழிவுபடுத்தும் வகையில் செயல்பட்டால், மூன்றாண்டுகள் வரை கடுங்காவல் சிறைத்தண்டனை, அல்லது அபராதம், அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை விதிக்க சட்டம் வழிவகை செய்கிறது. இது ஒவ்வொரு குடிமகனும் அறிந்திருக்க வேண்டிய முக்கிய சட்டமாகும்.
2002 ஆம் ஆண்டு இந்திய தேசியக் கொடி சட்டத்தின் கீழ், இந்திய குடிமக்கள் அனைவரும் ஆண்டு முழுவதும் தேசியக் கொடியை பயன்படுத்த உரிமை உண்டு. தேசியக் கொடியை சூரிய உதயத்திற்குப் பிறகுதான் ஏற்ற வேண்டும். அதேபோல், சூரிய அஸ்தமனம் ஆவதற்கு முன்பாக, அதாவது மாலை 6 மணிக்குள் இறக்கிவிட வேண்டும். 2005 ஆம் ஆண்டு இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு, தேசியக் கொடியை இடுப்பிற்குக் கீழே அணியக்கூடாது, கால்சட்டையாக அணியக்கூடாது போன்ற விதிமுறைகள் மேம்படுத்தப்பட்டன.
தேசியக் கொடியை கையால் நெய்த காதி துணியில் மட்டுமே செய்ய வேண்டும். கொடியை விரைவாகவும், எக்காள ஒலியுடனும் ஏற்ற வேண்டும். இறக்கும்போது சற்று மெதுவாகவும், அலங்காரமாகவும் இறக்க வேண்டும். பழுதடைந்த அல்லது கசங்கிய கொடியை பறக்கவிடக் கூடாது. மேலும், சிலை அல்லது நினைவுச் சின்னத்தை மூடுவதற்கு தேசியக் கொடியை பயன்படுத்தக் கூடாது.
கார்களில் தேசியக் கொடியைப் பறக்கவிட விரும்பினால், அதை நிலையாகப் பொருத்தப்பட்ட கம்பியில் மட்டுமே பொருத்த வேண்டும். தேசியக் கொடியை ஏந்தி ஊர்வலம் செல்லும்போது, வலப் பக்கமாக ஏந்திச் செல்ல வேண்டும். மற்ற கொடிகள் பல இருக்கும்போது, அனைத்து கொடிகளுக்கும் முன்பாக தேசியக் கொடி இருக்க வேண்டும்.
தேசியக் கொடியின் காவி நிறம் தூய்மையையும் கடவுளையும், வெள்ளை நிறம் அமைதியையும் உண்மையையும், பச்சை நிறம் பசுமையையும் செம்மையையும் குறிக்கின்றன. எனவே, இந்த விதிமுறைகளை அனைவரும் பின்பற்றி, நமது தேசியக் கொடிக்கு உரிய மரியாதையை அளிப்போம்.
