நிலவில் மனிதர்கள் நிரந்தரமாகத் தங்குவதற்கான தளத்தை அமைக்கும் மிகப்பெரிய திட்டத்தில் இந்தியாவையும் இணைத்துக்கொள்ள அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா விருப்பம் தெரிவித்துள்ளது. இதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ பல்வேறு வகைகளில் பங்களிக்க வேண்டும் என்று நாசா அழைப்பு விடுத்துள்ளது.
2023-ல் சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென் துருவப் பகுதியில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இதன் மூலம் நிலவில் மென்மையான தரையிறக்கத்தை வெற்றிகரமாகச் செய்த நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெற்றது. இந்த மகத்தான சாதனை, விண்வெளித் துறையில் இந்தியாவின் வளர்ச்சியை உலகிற்கு எடுத்துக்காட்டியது.
நாசா, 2028-ம் ஆண்டுக்குள் விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பவும், 2030-ம் ஆண்டுக்குள் நிலவில் நிரந்தர மனிதர் தங்கும் தளத்துக்கான கட்டமைப்புகளை உருவாக்கத் தொடங்கவும் திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டம் ‘ஆர்டெமிஸ்’ திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. ஒரு நாடு மட்டும் தனியாக நிலவில் மனிதர் தங்குவதற்கான தளத்தை அமைப்பது மிகவும் சவாலானது என்பதால், பல்வேறு நாடுகளின் விண்வெளி நிறுவனங்களுடன் இணைந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்த நாசா திட்டமிட்டுள்ளது.
விண்வெளித் துறையில் இந்தியாவின் வளர்ச்சியும், குறைந்த செலவில் சிக்கலான விண்வெளித் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்திய அனுபவமும் நாசாவின் கவனத்தை ஈர்த்துள்ளன. 'இந்தியா வலிமையான விண்வெளி சக்தியாக உருவெடுத்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால விண்வெளி ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது இயல்பான அடுத்தகட்ட நடவடிக்கை' என்று அமெரிக்க அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நிலவில் அமைக்கப்படும் மனிதர் தங்கும் தளத்துக்கு பல்வேறு நாடுகளிடம் இருந்து பங்களிப்புகளை நாசா எதிர்பார்க்கிறது. அறிவியல் ஆய்வுக் கருவிகள், விண்வெளி சாதனங்கள், தகவல் தொடர்பு அமைப்புகள், ரோபோட்டுகள், வழிகாட்டும் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான உபகரணங்களை இஸ்ரோ வழங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. எதிர்காலத்தில் நிலவின் மேற்பரப்பில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் மற்றும் கட்டமைப்புகளை உருவாக்குவதிலும் இந்தியா பங்களிக்க முடியும்.
இஸ்ரோவின் திறனை உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டிய முக்கியமான திட்டங்களில் சந்திரயான்-3 முக்கியமானது. இதற்கு முன்பு செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பிய செவ்வாய் சுற்றுக்கலமும் குறைந்த செலவில் மேற்கொள்ளப்பட்ட சிக்கலான விண்வெளித் திட்டமாக உலக அளவில் கவனம் பெற்றது. இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்திலும் இஸ்ரோ தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
நாசாவின் நிலவு திட்டத்தில் இந்தியா இணைவது வெறும் பங்களிப்பு மட்டுமல்ல. இதன் மூலம் மேம்பட்ட நிலவு தொழில்நுட்பங்களைப் பெறவும், எதிர்கால நிலவு ஆய்வுகளில் நேரடிப் பங்கு வகிக்கவும் இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைக்கும். நிலவின் மேற்பரப்பு ஆய்வு, தகவல் தொடர்பு, ரோபோட்டிக்ஸ், அறிவியல் ஆய்வுகள் உள்ளிட்ட துறைகளில் இந்தியாவின் பங்கு அதிகரிக்கலாம். மேலும், பூமியைத் தாண்டி மனிதர்கள் மேற்கொள்ளும் எதிர்கால விண்வெளி ஆய்வுகளுக்கான திட்டங்களை உருவாக்குவதிலும் இந்தியாவுக்கு முக்கியமான இடம் கிடைக்கும்.
நாசாவுக்கும் இஸ்ரோவுக்கும் இடையிலான விண்வெளி ஒத்துழைப்பு ஏற்கெனவே வளர்ந்து வருகிறது. இரு நாடுகளும் இணைந்து உருவாக்கிய ‘நிசார்’ செயற்கைக்கோள் பூமியை ஆய்வு செய்வதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இதுதவிர, நிலவு மற்றும் செவ்வாய் உள்ளிட்ட விண்வெளி ஆய்வுகளிலும் இரு நாடுகளின் ஒத்துழைப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியா ‘ஆர்டெமிஸ் ஒப்பந்தங்களிலும்’ இணைந்துள்ளது. நிலவு, செவ்வாய் மற்றும் பிற விண்வெளிப் பகுதிகளை எதிர்காலத்தில் ஆராய்வதில் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இந்தியா ஏற்கெனவே சந்திரயான்-4 திட்டத்தை உருவாக்கி வருகிறது. மேலும், ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஜாக்சாவுடன் இணைந்து சந்திரயான்-5 திட்டத்திலும் பணியாற்றி வருகிறது. இதனால், நிலவு ஆய்வில் இந்தியாவின் பங்கு அடுத்த சில ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த செலவில் சிக்கலான விண்வெளித் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்திய அனுபவம் கொண்ட இந்தியாவை இந்த முயற்சியில் முக்கிய கூட்டாளியாக நாசா பார்க்கிறது. நிலவில் மனிதர்களின் நிரந்தர இருப்பை உருவாக்கும் முயற்சியில், இந்தியாவின் இஸ்ரோ முக்கிய பங்காற்றும் வாய்ப்பு இதன் மூலம் உருவாகியுள்ளது.
