ஆதாரமிருந்தால் அரசியலை விட்டே விலகுவேன்: செங்கோட்டையனுக்கு நயினார் நாகேந்திரன் சவால்

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், நெல்லையில் தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ஆளும் திமுக அரசின் செயல்பாடுகளை அவர் கடுமையாக விமர்சித்தார். 'தமிழக அரசு ஸ்டுடியோ ஆட்சி நடத்துகிறது. சிங்கப்பெண் படை அமைக்கப்பட்டும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சரத்குமார், குழந்தைக்கு மாத்திரையை பொடியாக்கி கொடுத்ததாகக் கூறினார், ஆனால் சுற்றிலும் குழந்தை இல்லை' என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், 'சபாநாயகரின் சில கருத்துக்களையும் நடவடிக்கைகளையும் நான் வரவேற்கிறேன். ஆனால், ஆதாரமற்ற கருத்துக்களை முதலமைச்சர் பேசுவதை சபாநாயகர் அனுமதிக்கக் கூடாது. முதலமைச்சர் விஜய்யால் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர். மேலும், கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமாரின் நண்பரும் ஆவார். அண்டை மாநிலத்தைச் சேர்ந்தவரை டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிப்பது சரியான அணுகுமுறையா என்ற கேள்வி எழுகிறது' என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன், பாஜகவின் வாக்கு வங்கி சரிந்துவிட்டதாகக் கூறியது குறித்தும் நயினார் நாகேந்திரன் பதிலளித்தார். 'கடந்த மக்களவைத் தேர்தலை விட தற்போது 0.8 சதவீதம் கூடுதலாக வாக்குகளைப் பெற்றுள்ளோம். இந்த கணக்கு கூட தெரியாதவர் வருவாய்த் துறையில் என்ன சாதிக்கப் போகிறார்?' என அவர் விமர்சித்தார். 'நான் கல்லூரி தொடங்குவதற்காக விண்ணப்பித்ததாகக் கூறப்படும் கடிதம் செங்கோட்டையனிடம் இருந்தால் அதை வெளியிடலாம். அது உண்மையாக இருந்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயாராக இருக்கிறேன். இல்லையெனில் அவர் அமைச்சர் பதவியை விட்டு விலகத் தயாரா?' என்றும் அவர் சவால் விடுத்தார்.

மாணவர்களின் அடையாள அட்டைகளில் ஜாதி பெயரைக் குறிப்பிடுவது கண்டனத்திற்குரியது என்றும், ஐஏஎஸ் அதிகாரிகளின் பதவிக்கான மரியாதையை கூட இந்த அரசின் அமைச்சர்கள் கொடுப்பதில்லை என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version