பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது தாயார் குறித்து சட்டமன்றத்தில் பேசிய பேச்சு அரசியல் நாகரிகமற்றது என்றும், அருவருக்கத்தக்கது என்றும் அமைச்சர் ராஜ்மோகன் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 'ஒரு கட்சியின் மாநிலத் தலைவர் போல் அல்லாமல், தெருமுனைப் பேச்சாளரைப் போல நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார். அவருடைய பேச்சு அரசியல் நாகரிகத்துக்கு ஏற்புடையதல்ல. இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அரசியலில் மறைமுகமாக இருக்கும் நட்புகள் அனைத்தும் வெளிப்படும் நேரம் வந்துவிட்டது' என்று தெரிவித்தார்.
மேலும், திமுகவினரைப் போலவே பாஜகவினரும் அவதூறாகப் பேசி வருவதாக அமைச்சர் ராஜ்மோகன் குற்றம் சாட்டினார். முதல்-அமைச்சர் விஜய் சத்தமின்றி ஒவ்வொரு நாளும் சாதனைகளை நிகழ்த்தி வருவதாகவும், ஊழலை ஒழிப்போம் என்ற நம்பிக்கையை மக்களின் மனதில் அறுவடை செய்திருப்பதாகவும் அவர் கூறினார். 'மாற்றம் வேண்டும்' என ரீல்ஸ் போட்டது மக்களே தவிர, தவெகவினர் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.
முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது தாயார் குறித்து அநாகரிகமாகப் பேசியதாகக் கூறப்படும் நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, முதலமைச்சரின் தாயார் சார்பாகவும், முதலமைச்சர் சார்பாகவும் டிஜிபி அலுவலகத்தில் ஆன்லைன் வாயிலாக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் வர்த்தினி தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

