முதலமைச்சர் விஜய்யின் சுதந்திர தின விழா நிகழ்வுகள் மற்றும் அவரது செயல்பாடுகள் குறித்து முரசொலி நாளிதழ் கடுமையாக விமர்சித்துள்ளது. குறிப்பாக, சுதந்திர தின விழாவில் நடிகை திரிஷா முன் வரிசையில் அமர்ந்தது மற்றும் முதலமைச்சர் அவருடன் சல்யூட் பரிமாறிக் கொண்டது போன்றவற்றை முரசொலி சுட்டிக்காட்டி உள்ளது.
'மூன்று மாதங்களிலேயே முதலமைச்சருக்கு பயம் வந்துவிட்டது. சுதந்திர தினத்தன்று கொடி ஏற்றிய முதலமைச்சர் விஜய்யின் மானம் காற்றில் பறந்தது. வெட்கமோ, கூச்சமோ இல்லாமல் ஒரு நடிகையை முன்வரிசையில் உட்கார வைத்து, இருவரும் மாறி மாறி சல்யூட் வைத்துள்ள காட்சியை அவருக்கு வாக்களித்தவர்களாலேயே சகிக்க முடியவில்லை. அசிங்கத்தையும் அருவருப்பையும் பட்டவர்த்தன மாகச் செய்வதன்மூலமாக அதனை நியாயப்படுத்த நினைக்கிறவர் தான் இன்று தமிழ்நாட்டுக்கு முதலமைச்சராக வந்துள்ளார்' என்று முரசொலி விமர்சித்துள்ளது.
மேலும், 'மூன்றே மாதங்களில் அவருக்கு தனது செல்வாக்கு நிலைக்குமா. பதவி நிலைக்குமா என்ற பயம் வந்துவிட்டது. அதையும் அவர் உரையே காட்டிக் கொடுத்துவிட்டது. கொடி ஏற்றிவிட்டு முதலமைச்சர் விஜய் பேசுகிறார்… 'எல்லோரும் வாக்களித்துவிட்டோம். விஜய்யை ஜெயிக்க வைத்து முதலமைச்சர் ஆக்கிவிட்டோம். எனவே கடமையெல்லாம் முடிந்து விட்டது என்று யாரும் ஒதுங்கிப் போய்விடாதீர்கள். இனிமேல்தான் நீங்கள் நம்முடனே, அரசுடனே இருக்க வேண்டும். அப்போதுதான் உங்களுக்காக இருக்கிற அனைத்து நல்ல திட்டங்களையும் என்னால் செயல்படுத்த முடியும்' என்று அழுது புலம்பி இருக்கிறார். இந்தப் புலம்பலுக்கு, இந்த அழுகைக்கு என்ன காரணம்? அவரை நம்பி வாக்களித்தவர்கள். 'தவறு செய்துவிட்டோம்' என்று வருந்திக் கொண்டு இருக்கிறார்கள்' என்றும் முரசொலி குறிப்பிட்டுள்ளது.
கோவை பாலியல் வன்கொடுமை சம்பவம், போதை மருந்து நடமாட்டம் கட்டுப்படுத்தப்படாதது, மாணவன் அமுதன் கொலை போன்ற சம்பவங்களில் விஜய் அரசின் செயல்பாடுகளை முரசொலி கேள்விக்குள்ளாக்கியுள்ளது. '10 வயது சிறுமி கோவையில் பாலியல் வன் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுச் சிதைக்கப்பட்டபோது அதை மறைக்க நினைத்தது விஜய் அரசு. 'நீங்க ஆக்ஷன் ஹீரோ… தப்பு நடந்தா நட வடிக்கை எடுப்பீங்கன்னு நினைச்சு தானே வாக்களித்தோம் என்று ஒரு பெண் கதறினாரே. இப்படி பல பேரும் கதறிக் கொண்டு இருக்கிறார்கள்' என்று குறிப்பிட்டுள்ளது.
சினிமா தயாரிப்பாளர்களுக்கு அரசு பதவிகள் வழங்கப்படுவதையும் முரசொலி விமர்சித்துள்ளது. 'தனது படத்தைத் தயாரித்த சினிமா தயாரிப்பாளர்களுக்கு மகுடம் சூட்டிக் கொண்டு இருக்கிறார் விஜய். 'ஜனநாயகன்' படத்தைத் தயாரித்த வெங்கட நாராயணா தமிழ் நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாம். 'பிகில்'. 'கோட்' படத்தை தயாரித்த அர்ச்சனா கல்பாத்தி கோவில்களுக்கான அறங்காவலர்களைத் தேர்வு செய்யப் போகிறாராம். 'லியோ' படத்தைத் தயாரித்த ஜெகதீஷ் பழனிசாமி தான் முதலமைச்சரின் தனிச் செயலாளர். தனது ஜோசியருக்கு மகுடம். தேர்தலுக்கு முன்னதாக தனக்கு செலவு செய்தவருக்கு பதவி இதுதான் நடக்கிறது. இதை எல்லாம் தலையாட்டி ஏற்றுக் கொள்வார்கள் மக்கள் என்று நினைக்கிறாரா விஜய்?' என்று கேள்வி எழுப்பியுள்ளது.
திருவைகுண்டம் எம்.எல்.ஏ. சரவணன் மீதான பாலியல் புகார், அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் லஞ்சம், அமைச்சர் சரத்குமார் மற்றும் அமைச்சர் ரமேஷ் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து இதுவரை விஜய் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் முரசொலி சுட்டிக்காட்டியுள்ளது. 'எவர்மீதும் இதுவரை விஜய் நடவடிக்கை எடுத்தது இல்லை. அரசைப் பற்றி விமர்சித்து 'ட்விட்டர்' போட்டால் கைது. நீதிமன்றங்கள் நித்தமும் த.வெ.க. ஆட்சியாளர்கள்மீது தலையில் கொட்டுகின்றன. சொரணையே இல்லை இவர்களுக்கு. இப்படித்தான் போய்க் கொண்டு இருக்கிறது ஆட்சி' என்று விமர்சித்துள்ளது.
இறுதியாக, 'சுதந்திர தின விழாவுக்கு ஒரு நடிகையை அழைத்துவந்து, அவருக்கு 'சல்யூட்' அடிப்பதை விஜய் ரசிகர்களாலேயே ஏற்றுக் கொள்ள முடிய வில்லையே… மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? சமூக வலைதளங்களில் கழுவிக் கழுவி ஊற்றுகிறார்கள். 'உங்களுக்குத் தான் வாக்களித்தோம்… வாக்களித்ததற்காக வருத்தப்படுகிறோம்' என்று சொல்லும் வீடியோக்கள்தான் அதிகமாகப் பரவுகின்றன. அதனால்தான். 'என்னோடு இருங்கள். போய்விடாதீர்கள்' என்று கழிவிரக்கம் தேடப்பார்க் கிறார் விஜய். மக்கள் ஏமாளிகள் அல்ல. அவர் இன்னமும் தனிமைப்படுத்தப்படுவார்' என்று முரசொலி தனது விமர்சனத்தை முடித்துள்ளது.
