மதுராந்தகம் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தது குறித்து மரகதம் குமரவேல் விளக்கம் அளித்துள்ளார். அதிமுகவில் இருந்து விலகி, தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ள அவர், தனது முடிவிற்கான காரணங்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி.பிரபாகரை சந்தித்த மதுராந்தகம் (தனி), பெருந்துறை, தாராபுரம் (தனி) ஆகிய தொகுதிகளைச் சேர்ந்த அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோர் தங்களது ராஜினாமா கடிதங்களை அளித்தனர். சட்டப்பேரவைத் தலைவர் அவற்றை ஏற்றுக் கொண்டதாகத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, மூவரும் பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
செய்தியாளர்களை சந்தித்த மரகதம் குமரவேல், "தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் நாங்கள் மூவரும் முழுமனதோடு கழகத்தில் இணைந்துள்ளோம். கடந்த 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த மூன்று தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெற்றோம். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட குழப்பங்கள் மற்றும் தலைமை எடுத்த இருவேறு நிலைப்பாடுகள் (திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைப்பது அல்லது தவெக-வுக்கு ஆதரவு அளிப்பது) காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளோம். திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைப்பதில் எங்களுக்கு விருப்பமில்லை. இது எங்கள் தனிப்பட்ட விருப்பம் மட்டுமல்ல, பல சட்டப்பேரவை உறுப்பினர்களின் மனநிலையும் இதுதான்" என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், "முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வழிநடத்திய அதிமுக, திமுக உடன் இணைந்து ஆட்சி அமைக்க எங்கள் மனம் விரும்பவில்லை. நாங்கள் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்தபோது, எங்கள் மீது சமூக வலைதளங்களில் அவதூறுகள் பரப்பப்பட்டன. கடந்த 2021 தேர்தலில் உறுப்பினர்களாக இருந்தும் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியவில்லை. இந்த முறையும் எதிர்க்கட்சி உறுப்பினர்களாக செயல்படுவது கடினம். எங்கள் தொகுதி மக்களின் நலனுக்காகவும், முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி மீதுள்ள நம்பிக்கைக்காகவும் இந்த முடிவை எடுத்துள்ளோம். தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது குறித்து தவெக தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்" என்றும் அவர் கூறினார்.