உத்தரப்பிரதேச மாநிலத்தில், தனது காதலனுடன் தொலைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தபோது, தொடர்ந்து அழுது தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் தனது 3 வயது மகனை தாயே கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட ரூச்சி ஜிண்டால் என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சௌலி கிராமத்தில் மருந்துக் கடை நடத்தி வரும் கிருஷ்ண முராரி குப்தா என்பவரின் மனைவிதான் ரூச்சி ஜிண்டால். இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை இருந்துள்ளது. ரூச்சி ஜிண்டாலுக்கும், அவரது மைத்துனரான கோவிந்த் குப்தா என்பவருக்கும் இடையே திருமணத்திற்கு புறம்பான உறவு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், கிருஷ்ண முராரி குப்தா தனது கடைக்குச் சென்ற பிறகெல்லாம், ரூச்சி ஜிண்டால் தனது மைத்துனருடன் தொலைப்பேசியில் நீண்ட நேரம் அரட்டை அடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
சம்பவம் நடந்த ஜூன் 28 ஆம் தேதியன்று, போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொண்ட பிறகு குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருந்துள்ளது. ஆனால், தனது காதலனுடன் தொலைப்பேசியில் பேசிக்கொண்டிருந்த ரூச்சி ஜிண்டால், குழந்தையின் அழுகையை கண்டுகொள்ளவில்லை. ஒரு கட்டத்தில், காதலனுடன் பேசியதால் ஏற்பட்ட எரிச்சலிலும், குழந்தையின் தொடர் அழுகையாலும் ஆத்திரமடைந்த ரூச்சி, அழுதுகொண்டே இருந்த குழந்தையின் கழுத்தை நெரித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது.
பின்னர், கணவருக்குத் தெரிந்தால் பிரச்சனை ஆகிவிடும் என்று பயந்த ரூச்சி, குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டிருந்ததால் உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டதாக கிருஷ்ண முராரி குப்தாவுக்கு தொலைப்பேசியில் கூறியுள்ளார். இதனையடுத்து, இருவரும் உடனடியாக மதுராவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். போலியோ சொட்டு மருந்து காரணமாக குழந்தை உயிரிழந்ததாக நம்பிய குடும்பத்தினர், குழந்தையின் உடலை அடக்கம் செய்தனர்.
ஆனால், சுமார் ஒரு மாத காலத்திற்குப் பிறகு, ரூச்சி மீண்டும் தனது காதலன் கோவிந்த் குப்தாவுடன் தொலைப்பேசியில் உரையாடியபோது, 'குழந்தையை நானே கொன்றேன்' என்று கூறியதாகத் தெரிகிறது. இந்த உரையாடலை மறைந்திருந்து கேட்ட கிருஷ்ண முராரி குப்தா, அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றார். உடனடியாக இதுகுறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். மஹாவன் துணை காவல் கண்காணிப்பாளர் சஞ்சீவ் குமார் ராய், குழந்தையின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்படும் என்றும், அதன் முடிவுகளின் அடிப்படையில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

