முதலுதவி தவறாக சித்தரிக்கப்பட்டது – அமைச்சர் விஸ்வநாதன் வேதனை

மதுரையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியின் போது, வெயிலால் மயக்கமடைந்த மாணவிகளுக்கு தான் செய்த முதலுதவி, ஊடகங்களில் தவறான நோக்கில் சித்தரிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் விஸ்வநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுரையில் போதைப் பொருட்கள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் குற்றங்களுக்கான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் பங்கேற்ற மாணவ-மாணவிகள் கடும் வெயிலின் காரணமாக மயக்கமடைந்தனர். அவர்களுக்கு நான் செய்த முதலுதவி ஊடகங்களில் தவறான நோக்கத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஒரு பெண்ணின் தகப்பன் என்கிற முறையில் மனிதாபிமான உணர்வோடு நான் செய்த உதவிகள் தவறாக சித்தரிக்கப்படுவது மிகுந்த வேதனையளிக்கிறது. இப்பிரச்சினையில் எனது செயலுக்கு உள்நோக்கம் கற்பிப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. ஏதோ ஒருவகையில் எனது அணுகுமுறை தவறாக புரிந்து கொள்ளப்பட்ட நிலைமை ஏற்பட்டதற்காக எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, முதலமைச்சர் விஜய் பிறந்தநாளையொட்டி கடந்த 21-ந்தேதி மதுரை மாவட்டம் மேலூரில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியை உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். போட்டி முடிந்து, மேடையில் அமர்ந்திருந்த சிறுமிகளுக்கு அமைச்சர் முதலுதவி செய்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதில், ஒரு சிறுமியின் கால்களை அமுக்கி விட்டதாகவும், மற்றொரு சிறுமிக்கு கால் விரல்களுக்கு சுளுக்கு எடுத்ததாகவும் கூறப்படுகிறது. பொது இடத்தில் சிறுமிகளின் கால்களை எப்படி தொடலாம் என அமைச்சருக்கு எதிராக கண்டனங்கள் வலுத்தன.

இந்த சம்பவத்தால் ஏற்பட்ட சர்ச்சைக்கு அமைச்சர் விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார். தனது செயலுக்கு உள்நோக்கம் கற்பிக்கப்பட்டதாக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். மனிதாபிமான அடிப்படையில் செய்த உதவி தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version