ஆட்சியமைக்க பாஜகவிடம் உதவி கேட்கவில்லை: அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் ஆட்சியமைக்க பாஜகவிடம் நாங்கள் எந்த உதவியையும் கேட்கவில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'முதலமைச்சரின் தொலைநோக்கு சிந்தனை நேர்மையான ஆட்சியை வழங்குவதே. பேரவைக்குள் எதிர்க்கட்சிகள் கேட்டிருந்தால் முதலமைச்சர் பதிலளித்திருப்பார். ஆனால் பேரவைக்கு வெளியே சென்று அவர்கள் ஏதேதோ பேசிக்கொண்டிருக்கின்றனர். திமுகவை மக்கள் ஏற்காததால்தான் அக்கட்சி தேர்தலில் தோல்வியடைந்தது. நயினார் நாகேந்திரனைப் பொறுத்தவரை அவர் அரசியல் மேடைகளில் நகைச்சுவையாகப் பேசுபவர். அவரது பேச்சுகளுக்குப் பதிலளித்து நேரத்தை வீணடிக்கத் தேவையில்லை' என்று கூறினார்.

மேலும், 'குடியரசுத் தலைவரும் ஆளுநரும் ஒன்றுதான். மத்திய-மாநில உறவுகளை உருவாக்குவது ஆளுநரின் பணி. ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை என்று நாங்கள் சொல்ல மாட்டோம். தவெக ஆட்சியமைக்க பாஜகவிடம் உதவி கேட்கவில்லை. ஆனால் தவெக உதவி கேட்டதாக நயினார் நாகேந்திரன் நகைச்சுவை செய்கிறார். தவெக பெரும்பான்மை இல்லாதபோது ஆட்சி அமைக்க பலரிடமும் ஆதரவு கோரியதாக நயினார் நாகேந்திரன் பொய் சொல்கிறார். தவெக ஆட்சிக்கு வர முக்கிய காரணங்களில் ஒன்று குழந்தைகள்தான். அவர்கள்தான் பெற்றோர்களை தவெகவுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டது. நடிப்பின் உச்சத்தில் இருந்துவிட்டு அரசியலுக்கு வந்த முதல்வர் விஜய்க்கு சட்டப்பேரவையில் நடிக்க வேண்டிய அவசியம் இல்லை' என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version