சென்னை: அரசுப் பள்ளி ஒன்றிற்கு ஆய்வு செய்யச் சென்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கீர்த்தனா, அங்கு மாணவி ஒருவரிடம் ஆங்கிலத்தில் பேசச் சொல்லி நடந்துகொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து தமிழக கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார்.
தனது ஒரு வார கால அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய அமைச்சர் ராஜ்மோகன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தவெக கூட்டணி கட்சிகளை நாங்கள் ஏவலாள் போல நடத்துவதில்லை. ஐந்து ஆண்டுகால ஆட்சியின் விளைவே சட்டம் ஒழுங்கு சீர்குலைவு" என தெரிவித்தார்.
மேலும், காலங்காலமாக அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது தொகுதிகளில் உள்ள பல்வேறு இடங்களுக்குச் சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொள்வது ஒரு வழக்கமான மரபுதான் என்றும், இந்தச் சம்பவத்தின்போது அமைச்சர் கீர்த்தனா எந்தவொரு காணொளியையும் எடுக்கவில்லை என்றும், ஊடகங்கள் எடுத்த காணொளிதான் தேவையின்றி சர்ச்சையாக்கப்பட்டுவிட்டது என்றும் அவர் கூறினார்.
அமைச்சர் கீர்த்தனா ஒரு மாற்றுத் திறனாளியின் மகளாகப் பிறந்து, தமிழ்வழிக் கல்வியில் படித்து, பின்னர் தனது தனித்திறமையால் நன்றாக ஆங்கிலம் பேசும் அளவுக்குத் தன்னை வளர்த்துக்கொண்ட ஒரு அரசியல் ஆளுமை என்றும் அமைச்சர் ராஜ்மோகன் குறிப்பிட்டார்.
எந்தவொரு பள்ளியிலும் மாணவர்களின் ஆங்கிலப் புலமையையோ அல்லது அவர்களது பின்புலத்தையோ அரசியல் காரணங்களுக்காக யாரும் கேட்கக் கூடாது என்பதில் எனக்கு உடன்பாடு உண்டு என்றும் அவர் தெரிவித்தார்.
அந்த மாணவியைப் பார்த்தபோது, தன்னைப் போலவே தமிழ்வழியில் படித்து வரும் ஒருவரைப் பார்த்த உணர்வு ஏற்பட்டதால், முற்றிலும் ஓர் அக்கா ஸ்தானத்தில் இருந்துதான் அமைச்சர் கீர்த்தனா அன்போடு பேசினாரே தவிர, இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை என்றும், எனவே இதனை யாரும் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் அமைச்சர் ராஜ்மோகன் விளக்கமளித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் அளித்த விளக்கம், சர்ச்சைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர் கீர்த்தனாவின் பின்னணி மற்றும் அவரது கல்வித்தகுதி குறித்தும் அவர் எடுத்துரைத்தது குறிப்பிடத்தக்கது.
