ஒவ்வொரு வியாழக்கிழமையும் சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் இருந்து மனுக்கள் பெறப்படும் என தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் அறிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் குறைகளைக் கேட்டறியும் பணியை அவர் இன்று தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜேஷ்குமார், 'தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமையில் நடைபெற்றது. இனி ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை அன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் இடமிருந்து மனு பெறப்படும். மேலும், அந்தந்த மாவட்டங்களில் உள்ள பிரச்சனைகள் குறித்தும் நேரடியாகக் கேட்டறிய உள்ளோம். மாதத்தில் இருமுறை வருவாய் மாவட்டங்களுக்குச் சென்று அங்குள்ள காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளைச் சந்திக்க உள்ளோம்' என்று தெரிவித்தார்.
அணு கனிம சுரங்கம் தோண்டுவதற்கான ஒப்பந்தம் ஓராண்டு காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் என்றும், அப்போது தான் சட்டமன்ற உறுப்பினராக இருந்து இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அமைச்சர் கூறினார். இது தொடர்பாக அமைச்சர் துரைமுருகனை பலமுறை சந்தித்து வலியுறுத்தியபோது, மக்களைப் பாதிக்கும் திட்டங்களைச் செயல்படுத்த மாட்டோம் என்று அவர் கூறியதாகவும், ஆனால் தற்போது அந்தத் திட்டத்தை அவரே கையெழுத்திட்டுத் தொடங்கி வைத்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார். எந்தவொரு திட்டத்தையும் தொடங்குவதற்கு முன் மக்களிடம் அனுமதி பெற வேண்டும் என்றும், மத்திய அரசு அதனைச் செய்வதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக முதலமைச்சரைச் சந்தித்து மனு அளித்துள்ளதாகவும், அவர் கனிவுடன் கோரிக்கையைக் கேட்டறிந்து, இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்க முடியும் என்று விசாரிப்பதாகவும், மக்களைப் பாதிக்கும் திட்டத்தை கூட்டணி அரசு ஒருபோதும் செயல்படுத்தாது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேகதாது விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், 'மேகதாது விவகாரத்தில் நாங்கள் உறுதியாக உள்ளோம். தமிழகத்தின் உரிமையை நிச்சயமாக விட்டுக்கொடுக்க மாட்டோம். சட்டத்தின் படி கர்நாடகா அரசால் அணை கட்ட முடியாது. பாமக தலைவர் அன்புமணி, அந்தமானோடு ஒப்பிட்டு மேகதாது விவகாரத்தைப் பேசுவது பொருந்தாத ஒன்று. மேகதாது விவகாரம் தொடர்பாக விரைவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பிரச்சனைகளுக்கு ராகுல் காந்தி பிரதமராக வந்தால் மட்டுமே தீர்வு காண முடியும். அதனை நோக்கி எங்களுடைய பயணம் இருக்கும்' எனத் தெரிவித்தார்.