விருதுநகரில் நடைபெற்ற 'START RUN STOP DRUGS' போதைப்பொருள் எதிர்ப்பு மாரத்தான் ஓட்டம் நிகழ்ச்சியில் வைக்கப்பட்டிருந்த பதாகையில், அமைச்சர் கீர்த்தனாவின் பெயருக்கு கீழ் தனது பெயர் இடம்பெற்றிருந்தது குறித்து அமைச்சர் ஜெகதீஸ்வரி மாவட்ட ஆட்சியர் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலரிடம் கேள்வி எழுப்பியதால் சர்ச்சை எழுந்துள்ளது.
'முதலில் என் பெயர் தான் இருக்கணும்… எதற்கு கீர்த்தனா பெயர்?' என்று அவர் அதிகாரிகளை கடிந்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தனது துறை சார்ந்த நிகழ்ச்சி என்றும், PROTOCOL-ன் படி முதல்வர் பெயருக்குப் பிறகு தனது பெயர் இடம்பெற வேண்டும் என்றும், மேலும் துறை மற்றும் மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்ற முறையில் தனது பெயரே முதலில் வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 'இதை பலமுறை சொல்லி ஆகிவிட்டது. மீண்டும் மீண்டும் ஏன் இந்த தவறை செய்கிறீர்கள்?' என அவர் அதிகாரிகளை கண்டித்ததாக கூறப்படுகிறது.
தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். அமைச்சரவையில் inter-se-seniority வரிசைப்படி அவர் 10ம் இடத்தில் உள்ளார். இருப்பினும், விருதுநகரில் நடைபெற்ற இந்த விழாவில், மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்ற அடிப்படையில் தனது பெயரை பேனரில் மேலே போட்டு கீர்த்தனாவின் பெயரை கீழே போட்டிருக்க வேண்டும் என அமைச்சர் ஜெகதீஸ்வரி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அமைச்சரவையில் inter-se-seniority வரிசைப்படி அமைச்சர் ஜெகதீஸ்வரி 23வது இடத்தில் உள்ளார். இந்த சம்பவத்தால், அமைச்சர்களுக்கு இடையேயான முன்னுரிமை மற்றும் அதிகாரிகளின் செயல்பாடு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.