தமிழகத்தில் இரவு நேரங்களில் ஏற்படும் மின்வெட்டு சுமார் 40 நிமிடங்களில் சரிசெய்யப்படுவதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சில இடங்களில் வேண்டுமென்றே ஃபியூஸை எடுத்துச் செல்கின்றனர். இது மின்வெட்டுக்கு ஒரு காரணமாக அமைகிறது" என்று கூறினார்.
மின்வாரியத்தில் உள்ள பிரச்சனைகளை சரிசெய்ய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், மின் துறையில் விரைவில் 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார். மின்வாரிய ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான சலுகைகள் அனைத்தும் வழங்கப்படும் என்றும், பதவி உயர்வுகள் தாமதமின்றி நேர்மையாக நடைபெறும் என்றும் அவர் உறுதியளித்தார். இது போன்ற பதவி உயர்வுகள் கடந்த 45 வருடங்களில் நடந்ததில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமைச்சராக பொறுப்பேற்று ஒரு மாதம் ஆன நிலையில், யாரிடமும் ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்கவில்லை என்றும், இது 100% மக்களுக்கான அரசு என்றும் அமைச்சர் கூறினார். மின் துறை தனியார்மயமாவதைத் தடுத்துள்ளதாகவும், இது மிகவும் சவாலான துறை என்றும் அவர் தெரிவித்தார். பதவியேற்கும்போது மின் துறையின் கடன் ரூ.1.5 லட்சம் கோடி என நினைத்ததாகவும், ஆனால் அது ரூ.2.5 லட்சம் கோடியாக உள்ளது என்றும் அவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.
மேலும், வரும் உள்ளாட்சித் தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் என்றும் அமைச்சர் நிர்மல்குமார் நம்பிக்கை தெரிவித்தார். மின்வாரிய ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும், பணியிட மாற்றங்கள் நேர்மையாக நடைபெறும் என்றும் அவர் உறுதி கூறினார்.