திமுகவிற்கு முதலமைச்சர் விஜய் ஒரு பாடத்தை கற்றுக்கொடுத்துள்ளார் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார். அவதூறுகளுக்கு அஞ்சாமல் செயல்படும் முதல்வர் விஜய், திமுகவிற்கு ஒரு படிப்பினையை வழங்கியுள்ளார்.
பனையூரில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, "ஆபாசமாக பேசிய உதயநிதியை கைது செய்து, திமுகவிற்கு ஒரு பாடத்தை கற்றுக்கொடுத்துள்ளார் முதலமைச்சர் விஜய். கடந்த 80 நாட்களில் தவெக அரசை கவிழ்ப்பதுதான் திமுகவின் முதல் கொள்கையாக உள்ளது. எதிர்காலமே இல்லாமல் வீட்டில் அமர்ந்திருக்கும் மு.க.ஸ்டாலின், தவெக ஆட்சியை கவிழ்க்க சதி செய்து கொண்டிருக்கிறார். தோல்விக்கான காரணத்தை திமுக இதுவரை அறியவில்லை. தோல்விக்கு காரணம் பண்ணையார் தனம்தான். கொளத்தூர் சென்ற முதல்வரால் அன்று சேப்பாக்கம் செல்ல முடியாமல் போனது, அதனால் சேப்பாக்கம் தொகுதியை இழக்க நேரிட்டது.
சட்டமன்றத்தில் மரபை மீறிய செயலை திமுக செய்தது. சட்டமன்றத்தில் மரபை கடைபிடிக்கும் இயக்கம் தவெக. அண்ணா உருவாக்கிய இயக்கத்தை ஆபாச மொழியால் அழிக்கிறார் உதயநிதி. பெண்களை இழிவுபடுத்தும் பேச்சு ஏற்க முடியாதது. எம்ஜிஆர் இருக்கும் வரை திமுகவால் வெல்ல முடியவில்லை. திமுகவுக்கு எதிர்காலம் இல்லை.
முதலமைச்சர் விஜய் பெண்களை தரக்குறைவாகவோ, அவதூறாகவோ பேசியதில்லை. பெண்களை கடவுளாக பேசுவதை விட சமத்துவமாக பேச வேண்டும். பெண்களை விமர்சிப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள். திமுகவினர் தனிப்பட்ட தாக்குதல்களை செய்கின்றனர். தவெக எம்எல்ஏக்களிடம் செந்தில் பாலாஜி பேரம் பேசியதாக கூறப்படுகிறது. 70 வருட பாரம்பரிய கட்சியின் தலைவர் கொளத்தூரில் தோல்வி அடைந்தார். கடந்த தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி வாய்ப்பு 'ஜஸ்ட் மிஸ்' ஆனது.
நீங்கள் உங்கள் தாத்தாவின் அடையாளத்தையும், திமுகவின் அடையாளத்தையும் தூக்கிப் போட்டுவிட்டு, எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு வாருங்கள். சேப்பாக்கத்தில் முதல்வர் விஜய் ஒரு சாமானிய பெண்ணை வேட்பாளராக நிறுத்துவார். இதற்கு நாங்கள் சவால் விடுகிறோம். நீங்கள் மீண்டும் சேப்பாக்கத்தில் நின்றால் டெபாசிட் கூட வாங்க மாட்டீர்கள்" என்று அவர் கூறினார்.
