இந்தியாவில் செயல்படும் டிஜிட்டல் தளங்கள் இந்திய சட்டங்களுக்கு இணங்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக, மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளில் பரவும் போலி பதிவுகள் மற்றும் டீப்பேக் (deepfake) உள்ளடக்கங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மெட்டா நிறுவனத்துடன் நடத்திய தொழில்நுட்பப் பேச்சுவார்த்தையில், அந்நிறுவனத்தின் அல்காரிதம்களில் குறைபாடுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் அடிப்படையில், சட்டவிரோத போலி பதிவுகள் மற்றும் டீப்பேக் உள்ளடக்கங்களைக் கண்டறிந்து அகற்றுவதற்காக மெட்டா தனது அல்காரிதம்களைப் புதுப்பிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள விதிமீறல் விளம்பரங்கள் மற்றும் தொழில்நுட்பப் பிழைகள் குறித்து மத்திய அரசு தொடர்ந்து மெட்டா நிறுவனத்திற்கு நோட்டீஸ் மற்றும் சம்மன் அனுப்பி வந்த நிலையில், இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டீப்பேக்குகள் மற்றும் போலி பதிவுகளைக் கண்டறிந்து அகற்றும் செயல்முறையை விரைவுபடுத்துவதற்காக, அரசுடன் இன்னும் நெருக்கமாகப் பணியாற்ற வேண்டும் என்றும் மெட்டா நிறுவனத்தை அரசு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
மேலும், போலி பதிவுகளை வெளியிடுவோர் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தவும் மெட்டா நிறுவனத்தை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. குறைபாடுகளைச் சரிசெய்வது தொடர்பாக விரிவான செயல் திட்டத்தை சமர்ப்பிக்குமாறும் மெட்டாவுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து டிஜிட்டல் தளங்களும் இந்திய சட்டங்களுக்கு முழுமையாக இணங்க வேண்டும் என்பதே மத்திய அரசின் நிலைப்பாடாக உள்ளது.
