மேகேதாட்டு அணை விவகாரம்: தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டும் திட்டத்திற்கு மத்திய நீர்வள ஆணையம் அளித்த ஒப்புதலை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மறு ஆய்வு மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மேகேதாட்டு அணை திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க மத்திய நீர்வள ஆணையம் அளித்த ஒப்புதலை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து, அந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழக அரசு மீண்டும் ஒரு மனுவை தாக்கல் செய்தது. இந்த மறு ஆய்வு மனுவை தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் கே.வினோத் சந்திரன, என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

மறு ஆய்வு மனுவின் உள்ளடக்கங்களையும், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ஆவணங்களையும் கவனமாக பரிசீலித்தோம். இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யத் தேவையான முகாந்திரம் ஏதும் இல்லை என்பதில் நாங்கள் திருப்தி அடைகிறோம் என்று கூறி, மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக திறந்த நீதிமன்ற விசாரணைக்கான கோரிக்கையையும் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

முன்னதாக, மேகேதாட்டு அணை திட்டத்தால் தமிழகம் பெரிதும் பாதிக்கப்படும் என்றும், காவிரி தீர்ப்பாயத்தின் உத்தரவை மீறும் செயல் என்றும் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு பதிலளித்த கர்நாடக அரசு, இந்த திட்டத்தால் தமிழகம் பாதிக்கப்படாது என்றும், தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட தண்ணீரை வழங்க எந்த தடையும் இருக்காது என்றும் தெரிவித்தது. இருப்பினும், அன்றைய உச்ச நீதிமன்ற அமர்வு, திட்ட வரைவு அறிக்கை காவிரி ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிசீலனையில் மட்டுமே உள்ளது என்றும், அவை ஒப்புதல் அளித்தால் மட்டுமே வரைவு அறிக்கை ஏற்கப்படும் என்றும், தற்போதைய சூழ்நிலையில் மனு அவசரப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் விசாரணைக்கு ஏற்க முடியாது என்றும் கூறி மனுவை நிராகரித்தது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version