மேகதாது அணைக்கு எதிராக முதல்வர் விஜயின் தனித்தீர்மானம்: சட்டசபையில் ஏகமனதாக ஆதரவு!

கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முயற்சிப்பதை எதிர்த்து, தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்திற்கு சட்டப்பேரவையில் உள்ள அனைத்து கட்சிகளும் ஏகமனதாக ஆதரவு தெரிவித்துள்ளன.

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை ஒத்திவைத்துவிட்டு, அரசின் சிறப்புத் தீர்மானத்தை வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முன்மொழிந்தார். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் விஜய், மேகதாது அணை திட்டத்திற்கு எதிரான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார். அவர் பேசுகையில், 'மேகதாது அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் தொழில் உள்ளிட்ட எந்தவித அனுமதியும் வழங்கக்கூடாது என ஒன்றிய அரசுக்கு இந்த பேரவை கேட்டுக்கொள்கிறது. கர்நாடகா அரசு நீதிமன்ற உத்தரவை மீறி அணை கட்ட முயற்சிக்கிறது. கர்நாடகா அரசின் விரிவான திட்ட அறிக்கையை ஒன்றிய அரசு பரிசீலிக்கக்கூடாது. அதற்கான திட்ட அனுமதியையும் வழங்கக்கூடாது என ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம்' என்று தீர்மானத்தை முன்மொழிந்தார்.

முதலமைச்சர் விஜயின் இந்த தனித்தீர்மானத்திற்கு காங்கிரஸ் கட்சி அமைச்சர் ராஜேஷ்குமார் ஆதரவு தெரிவித்தார். கர்நாடகா அரசின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கையை காங்கிரஸ் கட்சி கண்டிக்கிறது எனவும், மேகதாது அணைக்கு எந்தவித அனுமதியும் வழங்கக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தினார். மேலும், தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவும், விவசாயிகள் நலனைப் பாதுகாக்கவும் தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் காங்கிரஸ் கட்சி முழு ஆதரவை வழங்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தளி ராமச்சந்திரன், கொ.ம.தே.க. எம்.எல்.ஏ. நித்தியானந்தன், தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், விசிக அமைச்சர் வன்னி அரசு உள்ளிட்ட அனைத்து கட்சித் தலைவர்களும் முதலமைச்சரின் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டினால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் பாலைவனமாக மாறிவிடும் என்றும், கர்நாடக முதலமைச்சர் டி.கே சிவகுமாரின் கருத்து கண்டனத்துக்குரியது என்றும் தளி ராமச்சந்திரன் கூறினார். தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு என்றைக்கு வரப்போகிறது என்றும், காவிரி பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். தமிழ்நாட்டின் நியாயத்தை உணர்ந்து மத்திய அரசு செயல்பட வேண்டும் என்றும், தமிழர் உரிமை காக்கும் தமிழ்நாடு அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுதுணையாக இருக்கும் என்றும் வன்னி அரசு கூறினார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version