திமுக கூட்டணியில் முக்கிய அங்கமாக பார்க்கப்பட்ட மதிமுக, தற்போது அந்த கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதிமுகவின் இந்த திடீர் முடிவு, அதன் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற உயர்நிலைக் குழு கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, முதன்மை செயலாளர் துரை வைகோ, பொருளாளர் செந்திலதிபன், அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுனன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். தற்போதைய அரசியல் சூழல் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்ட பின்னரே, கூட்டணியில் இருந்து விலகும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிகிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலிருந்தே திமுகவுக்கும் மதிமுகவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது. சட்டமன்றத் தேர்தலில் மதிமுகவுக்கு நான்கு தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டதும், திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதும் கட்சியினரிடையே அதிருப்தியை அதிகரித்ததாக நிர்வாகிகள் சிலர் தெரிவித்தனர். மேலும், வைகோவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படாததும் அதிருப்திக்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், முதலமைச்சர் விஜய், வைகோவை நேரில் சந்தித்துப் பேசியதும், துரை வைகோவுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதும் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. சட்டமன்றத் தேர்தலில் மதிமுக இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றாலும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால் புதிய அரசியல் முடிவுகளை எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், எதிர்காலத்தில் தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து செயல்படுவது குறித்து கட்சிக்குள் ஆலோசனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில், திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறுவதாக அறிவித்துள்ளது, காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.