சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அரசுக்கு ஆதரவு தெரிவித்ததன் பின்னணி குறித்து மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.காமராஜ் விளக்கமளித்துள்ளார். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தொகுதியில் அதிமுக கூட்டணியில், அமமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் எஸ்.காமராஜ்.
சட்டப்பேரவைத் தேர்தலில் இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்ட எழுச்சியால், அரசியல் ஜாம்பவான்கள் பலர் தோல்வியடைந்தனர். மன்னார்குடியிலும் அத்தகைய எழுச்சி இருந்தபோதிலும், கூட்டணி கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களின் உழைப்பால் தனக்கு வெற்றி கிடைத்ததாக அவர் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலுக்கு ஏற்ப, ஒரு முக்கிய முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும், இந்த முடிவை 99 சதவீதம் பேர் சரி என்று தெரிவித்ததாகவும் அவர் கூறினார். சிலர், இந்த முடிவை தாமதமாக எடுத்திருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்ததாக அவர் தெரிவித்தார்.
ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இருந்தால், மக்களுக்கு திட்டங்களை எளிதாக பெற்றுத்தர முடியும் என்பதால் இந்த முடிவை எடுத்ததாக எஸ்.காமராஜ் விளக்கினார். மேலும், இந்த தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த டி.ஆர்.பி. ராஜா, யாராலும் செய்ய முடியாத நல்ல திட்டங்களை நிறைவேற்றித் தந்திருப்பதை அறிந்ததாகவும், அவருடன் அரசியல் தாண்டி நட்பு தொடர வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். அடுத்த 5 ஆண்டுகளில் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதை தனது கடமையாகக் கொண்டு செயல்படுவேன் என்றும் அவர் உறுதியளித்தார்.