மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில், இருசக்கர வாகன விபத்தில் சிக்கி, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும், அலட்சியப்படுத்தப்பட்டதாகவும் உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் கண்ணீருடன் குற்றம்சாட்டியுள்ளனர்.
விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பரமேஸ்வரன் என்ற இளைஞரின் கையில் இருந்த காயத்திற்கு கூட கடந்த நான்கு நாட்களாக மருந்து போடவில்லை என்றும், சாதாரண கட்டு போடுவதற்கு கூட பணம் கேட்பதாகவும் அவரது உறவினர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். இந்த அவலநிலையால், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இளைஞர் பரமேஸ்வரன் உயிரிழந்தார்.
இதனையடுத்து, உயிரிழந்த இளைஞரின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்தனர். மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தால் தங்கள் உறவினர் உயிரிழந்ததாக அவர்கள் கண்ணீர் மல்க குற்றஞ்சாட்டினர்.
இந்நிலையில், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்காததால் இளைஞர் உயிரிழந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், கால்முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த பரமேஸ்வரன் என்ற இளைஞருக்கு, நரம்புகள் பாதிக்கப்பட்டதன் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே உயிரிழப்புக்கான முழுமையான காரணம் தெரியவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவமனையில் சிகிச்சைக்காக பணம் பெற்றதாக வந்த குற்றச்சாட்டுகள் குறித்தும் மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக ஏதேனும் ஆதாரங்கள் இருந்தால், அது குறித்து புகார் அளிக்கலாம் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
