மத்திய பிரதேச மாநிலத்தில் விரைவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்காக, திருமணம், விவாகரத்து, சொத்துரிமை உள்ளிட்ட குடும்ப விவகாரங்களை ஒழுங்குபடுத்தும் வகையில் பொது சிவில் சட்டத்தை உருவாக்குவதற்காகச் சிறப்புக் குழு நியமிக்கப்பட்டது. இந்த குழு, இறுதி வரைவு அறிக்கையை மாநில அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
இந்த புதிய சட்டத் திருத்தத்தின்படி, திருமணம் ஆகாமல் கூட்டு வாழ்க்கை (லிவ்-இன்) உறவில் இருக்கும் ஜோடிகள் கட்டாயமாக தங்களது உறவை முறைப்படி பதிவு செய்ய வேண்டும். வயது வந்தவர்கள் இருவரும் தங்களது பெயர் மற்றும் வயதினை உறுதிப்படுத்தும் ஆவணங்களைச் சமர்ப்பித்து, மாவட்ட பதிவாளரிடம் பதிவு செய்ய வேண்டும். பின்பு, இருவரும் பிரிந்து செல்ல முடிவு செய்தால், அதையும் முறைப்படி பதிவு செய்து உறவை ரத்து செய்ய வேண்டும்.
கூட்டு வாழ்க்கையில் ஈடுபடும் நபர்கள் குறித்துப் பெற்றோர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படும். மேலும், உள்ளூர் காவல் நிலையங்கள் தங்கள் பகுதியில் பதிவு செய்யப்பட்ட அனைத்து கூட்டு வாழ்க்கை ஜோடிகளின் விவரங்களையும் பராமரிக்கும். பதிவு செய்யத் தவறினால் மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
பதிவு செய்யப்படாத கூட்டு வாழ்க்கை உறவு குறித்துத் தெரிந்தால் அண்டை வீட்டார் அல்லது வீட்டு உரிமையாளர்கள் கூட புகார் அளிக்க அனுமதிக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், மோகன் யாதவ் தலைமையிலான பாஜக மாநில அரசு, இந்த பொது சிவில் சட்ட மசோதாவை இன்று 20ம் தேதி, சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்த சட்டம் அமலுக்கு வந்தால், இது நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருமணம் ஆகாமல் ஒன்றாக வாழும் ஜோடிகளின் உறவை முறைப்படுத்துவதோடு, அவர்களது உரிமைகளையும் பாதுகாக்கும் நோக்கில் இந்த சட்டம் கொண்டுவரப்படுவதாகக் கூறப்படுகிறது. அதே சமயம், தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதாக சில தரப்பினர் கருத்து தெரிவிக்கவும் வாய்ப்புள்ளது.
மத்திய பிரதேச சட்டப்பேரவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, விவாதங்களுக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டால், இது மாநிலத்தின் சமூக கட்டமைப்பில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

