மும்பையைச் சேர்ந்த சஹில் லவ்ஹாரே, அமராவதி மாவட்டத்தைச் சேர்ந்த வைஷ்ணவி என்ற பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் ஒருபுறம் இருக்க, வைஷ்ணவிக்கு சமீபத்தில் வேறொரு நபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவல் காதலன் சஹிலுக்குத் தெரியவந்தபோது, அவர் மிகுந்த ஆத்திரமடைந்துள்ளார். இதனால், நேற்று இரவு நாசிக் அருகே வன்சம்பதா பகுதியில் வைஷ்ணவியை சந்தித்த சஹில், திருமண நிச்சயதார்த்தம் குறித்து விவரம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தின்போது, இளம்பெண் வைஷ்ணவி தனது வருங்காலக் கணவரை செல்போனில் தொடர்பு கொண்டு, சஹில் தன்னைத் தொந்தரவு செய்வதாகக் கூறியுள்ளார். இந்த உரையாடல் துண்டிக்கப்படாமல், வைஷ்ணவி மற்றும் சஹில் இடையே நடந்த வாக்குவாதத்தை வருங்காலக் கணவர் கேட்டுக்கொண்டே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளார். சுமார் 22 நிமிடங்களுக்குப் பிறகு திடீரென உரையாடல் துண்டிக்கப்பட்டுள்ளது. அப்போது போனை எடுத்த சஹில், 'வைஷ்ணவியைக் கொன்றுவிட்டேன்' என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார். அதிர்ச்சியடைந்த வருங்காலக் கணவர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது, வைஷ்ணவி கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக காவல்துறைக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில், ஒரு மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில் சஹிலின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வைஷ்ணவியை கத்தியால் குத்திக் கொலை செய்த பிறகு, சஹில் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதலியை கொன்றுவிட்டு இளைஞர் தற்கொலை: பரபரப்பு சம்பவம்

