சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான நடிகர் பாவா லட்சுமணன், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பொருளாதார ரீதியாகவும் சிரமங்களை எதிர்கொண்ட நிலையில், அவருக்கு லெஜண்ட் சரவணன் சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவி மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த உதவியால் நெகிழ்ச்சி அடைந்த பாவா லட்சுமணன், 'லெஜண்ட் சரவணனின் உதவியை நான் என்றும் மறக்கமாட்டேன்' என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
'மாயி' திரைப்படத்தில் 'வாமா மின்னல்' என்ற வசனத்தின் மூலம் பரவலாக அறியப்பட்ட நடிகர் பாவா லட்சுமணன், நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்துள்ளார். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட இவர், அதன் தீவிரத்தின் காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது கால் கட்டைவிரல் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. கடந்த சில மாதங்களாக வருமானம் இன்றி, மருத்துவ செலவுகளுக்கு கூட பணம் இல்லாமல் தவித்து வந்த பாவா லட்சுமணன், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
குடியிருக்க வீடு கூட இல்லாமல் தவித்த நடிகர் பாவா லட்சுமணனின் நிலையை அறிந்த அமைச்சர் ராஜ்மோகன், அவரை நேரில் சந்தித்து தனது எம்.எல்.ஏ. குடியிருப்பை அவருக்கு வழங்கினார். இந்த சூழலில், அவரது உடல்நலக்குறைவு மற்றும் தற்போதைய நிலையை அறிந்த லெஜண்ட் சரவணன், அவரது சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
மேலும், பாவா லட்சுமணனுக்கு கட்டில், மெத்தை, பீரோ, வாஷிங் மெஷின், கிரைண்டர் உள்ளிட்ட அத்தியாவசிய வீட்டு உபயோகப் பொருட்களையும் லெஜண்ட் சரவணா சார்பில் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து வீட்டு உபயோகப் பொருட்களையும் இலவசமாக வழங்கியதோடு, நிதியுதவியும் செய்த லெஜண்ட் சரவணனுக்கு நடிகர் பாவா லட்சுமணன் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.
இந்த உதவி குறித்து பேசிய பாவா லட்சுமணன், 'லெஜண்ட் சரவணனின் இந்த மகத்தான உதவியை நான் என் வாழ்நாளில் என்றும் மறக்கமாட்டேன். இது எனக்கு மிகுந்த மன ஆறுதலையும், நம்பிக்கையையும் அளித்துள்ளது' என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். இந்த உதவி, பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட கலைஞர்களுக்கு ஒரு பெரிய ஆதரவாக அமைந்துள்ளது.

