குறுவை சிறப்புத்தொகுப்பு அறிவிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகியும், அது விவசாயிகளைச் சென்றடையாதது கடும் கண்டனத்துக்குரியது என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது: "குறுவை சிறப்புத்தொகுப்பு அறிவிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்துவிட்ட பிறகும், விவசாயிகளை அது சென்றடையாமல் இருப்பது கடும் கண்டனத்துக்குரியது. மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறக்காத காரணத்தால், குறுவை சாகுபடி பொய்த்துவிட்டது. எனவே, விவசாயிகளுக்கு அரசு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று பேரவையில் நான் பேசி இருந்தேன்.
வறட்சி நிவாரணம் குறித்து கேட்டபோது, குறுவை சிறப்புத்தொகுப்புக்காக நிதி ஒதுக்கப்பட்டது என முதலமைச்சர் விளக்கமளித்தார். ஆனால், அவர் ஒதுக்கியதாகக் கூறிய அந்த நிதியும் இன்று வரை விவசாயிகளைச் சென்றடையவில்லை. இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இந்த திறனற்ற அரசு இவற்றைக் கவனித்ததா? அல்லது வழக்கம்போல விவசாயிகள் பிரச்சினையில் அலட்சியம் காட்டுகிறதா?
எம்.எல்.ஏ.க்களுக்குக் கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை, விவசாயிகளுக்கான நிதியைக் கொண்டு சேர்ப்பதில் இந்த அரசு காட்டியிருக்க வேண்டும். விவசாயிகள் நலனில் அக்கறையின்றி தொடர்ந்து மெத்தனப் போக்கோடு நடந்து கொள்வது ஏற்புடையதல்ல. குறுவை சிறப்புத்தொகுப்பு நிதி விவசாயிகளுக்குச் சென்று சேர இந்த விவசாயிகள் விரோத அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
