கர்நாடகாவில் உள்ள கபினி அணை நிரம்பி வழிவதால், அங்கிருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 10,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இது இயற்கையின் கொடை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இருப்பினும், கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்தும் தண்ணீர் திறக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கர்நாடகாவில் காவிரியின் துணை ஆறுகளில் ஒன்றான கபினி அணை நிரம்பி வழிவதையடுத்து, அங்கிருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நீர் எவ்வளவு காலத்திற்கு திறக்கப்படும், தமிழகத்தின் தேவைக்கு போதுமானதாக இருக்குமா என்பது நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்தே அமையும். எனினும், இயற்கையின் கொடையால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவது நிம்மதியளிக்கிறது.
கபினி அணையின் தற்போதைய நீர்மட்டம் 2281 அடியாகவும், நீர் இருப்பு 17.50 டி.எம்.சியாகவும் உள்ளது. அணை நிரம்ப இன்னும் 3 அடி உயரமும், 2 டி.எம்.சி நீரும் தேவை என்ற நிலையில், வினாடிக்கு 11747 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பிற்பகலில் நீர்வரத்து அதிகரித்ததால், நாளைக்குள் அணை நிரம்பிவிடும் என்பதால் முன்னெச்சரிக்கையாக நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இது கர்நாடக அரசின் விருப்பம் அல்ல, இயற்கையின் கொடையே ஆகும்.
காவிரி பாசன மாவட்டங்களுக்கு சம்பா பருவத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டுமென்றால், குறைந்தபட்சம் 40 முதல் 45 டி.எம்.சி தண்ணீர் தேவைப்படுகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்தால், கபினி அணையிலிருந்து தண்ணீர் வருவதும் நிறுத்தப்பட்டுவிடும். இதனால் தமிழகத்திற்கு பெரிய அளவில் பயன் கிடைக்காது.
மற்றொரு அணையான ஹாரங்கி நிரம்பி வழிவதால், அதிலிருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு திறக்கப்படுகிறது. அடுத்த சில நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, வெள்ளம் போல் வரும் இந்த கூடுதல் நீரை சேமித்து வைக்க வசதியாக, கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்தும் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும்.
மேலும், இந்த தண்ணீரை இன்னும் ஒரு வாரத்திற்கு தொடர்ந்து திறப்பதன் மூலம், தமிழ்நாட்டின் காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடி செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்" என்று அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
