கிருஷ்ணகிரியில், தன்னை விட வயது குறைந்த வாலிபருடன் வாழ திட்டமிட்ட மனைவி, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய மனைவி, அவரது கள்ளக்காதலன் மற்றும் உடந்தையாக இருந்த மேலும் இருவர் என மொத்தம் 5 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேவதாசனபள்ளியைச் சேர்ந்த ரமேஷ் (35), ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சாந்திபுரம் மண்டலம் போயனபள்ளியைச் சேர்ந்த ஹாசினி (30) என்பவரை 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் மவுனிகா என்ற மகள் உள்ளார். ரமேஷ், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் ஓசூரில் வசித்து வந்து, அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்பு, ஹாசினி தனது கணவர் ரமேஷ் மற்றும் மகள் மவுனிகாவுடன் தாய் வீட்டிற்கு வந்துள்ளார். மறுநாள், மல்லப்பாமலைக்கு கோவிலுக்கு அழைத்துச் செல்லும்படி ஹாசினி தனது கணவரிடம் கேட்டுள்ளார். அதன்படி, ரமேஷ் தனது மனைவியையும், குழந்தையையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு கோவிலுக்கு புறப்பட்டார்.
ஆனால், வெகுநேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால் ஹாசினியின் தாய் ருக்கம்மா பதற்றமடைந்து, குப்பம் அடுத்த ரால்லபூடுகூரு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடனடியாக போலீசார் மல்லப்பாமலை பகுதிக்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள புதருக்குள் ரமேஷ் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக குப்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், ஹாசினியையும், குழந்தையையும் காணவில்லை. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, ஹாசினி தனது குழந்தையுடன் வேறு ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் செல்வது பதிவாகி இருந்தது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், ஹாசினி போயனபள்ளியைச் சேர்ந்த யுகேந்தர் என்ற வாலிபருடன் பழங்கி வந்துள்ளார். தன்னை விட வயது குறைந்த யுகேந்தருடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இவர்களின் கள்ளக்காதல் விவகாரத்தை அறிந்த ரமேஷ், ஹாசினியிடம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார்.
தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த ரமேஷை கொலை செய்ய ஹாசினி, யுகேந்தருடன் திட்டமிட்டுள்ளார். அதன்படி, கணவரிடம் மல்லப்பாமலைக்கு செல்வதாக கூறி, குழந்தையை தூக்கிக்கொண்டு அவருடன் சென்றுள்ளார். மல்லப்பாமலை பாதையில் செல்லும்போது, 3-வது வளைவில் ஹாசினி தனது கைப்பையை கீழே போடுவது போல் நடித்துள்ளார். உடனே ரமேஷ் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கைப்பையை எடுக்க சென்றபோது, மறைந்திருந்த யுகேந்தர் மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேர் சேர்ந்து ரமேஷை சரமாரியாக வெட்டி கொலை செய்து, உடலை புதரில் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
பின்னர், யுகேந்தர், ஹாசினி மற்றும் குழந்தை மவுனிகாவுடன் ரமேஷின் மோட்டார் சைக்கிளில் குப்பம் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, யுகேந்தர் மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேர் ரயிலில் ஏறி தப்பி சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட யுகேந்தர், ஹாசினி, குழந்தை மவுனிகா மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த 2 பேர் என மொத்தம் 5 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
