ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவில் நேற்றைய 60வது லீக் ஆட்டத்தில், ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற குஜராத் கேப்டன் கில், பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, அதிரடியாக விளையாடி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் குவித்தது.
248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 29 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணிக்கு 2 முக்கிய புள்ளிகள் கிடைத்துள்ளன.
வெற்றி குறித்து கொல்கத்தா அணியின் கேப்டன் ரகானே கூறுகையில், 'இது ஒரு மிகச் சிறந்த ஆட்டம். இரண்டு புள்ளிகள் கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி. எங்கள் பேட்டிங் தொடக்கம் அருமையாக இருந்தது. ஃபில் ஆலன், அங்கிரிஷ் ரகுவன்ஷி மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோரின் சிறப்பான ஆட்டம், குறிப்பாக அவர்களின் பார்ட்னர்ஷிப், மிகவும் அற்புதமாக இருந்தது. தரமான பந்துவீச்சாளர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கி ரன் குவித்தது பாராட்டுக்குரியது. இந்த வெற்றிக்கு பேட்ஸ்மேன்களே முழு தகுதியானவர்கள்' எனத் தெரிவித்தார்.
மேலும் அவர், 'ஒவ்வொரு போட்டியையும் தனித்தனியாக அணுகுவது குறித்தே நாங்கள் பேசி வருகிறோம். வீரர்களின் இந்த முனைப்பு தொடர வேண்டும்' என்றும் குறிப்பிட்டார். குஜராத் அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளது.