கேரளாவில் ஷிகெல்லா பாக்டீரியா தொற்றால் 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் மேலும் இரு குழந்தைகள் இந்த பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாசுபட்ட நீர் மற்றும் உணவுப் பொருட்கள் மூலம் இந்த தொற்று பரவுவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடும் வயிற்றுப்போக்கு இதன் முக்கிய அறிகுறி என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஷிகெல்லா என்பது செரிமான மண்டலத்தையும், குறிப்பாக குடல்களையும் தாக்கும் ஒரு பாக்டீரியா தொற்று ஆகும். இது மிகவும் எளிதில் பரவக்கூடியது. அசுத்தமான உணவு அல்லது நீரை உட்கொள்வதால் வயிற்றுப்போக்கு ஏற்படலாம். பாதிக்கப்பட்ட நபருடன் நேரடித் தொடர்பு மூலமும் இது பரவ வாய்ப்புள்ளது.
உதாரணமாக, பாதிக்கப்பட்ட குழந்தையின் டயப்பரை மாற்றிய பிறகு கைகளைச் சுத்தப்படுத்தாவிட்டால், அல்லது பாதிக்கப்பட்ட நபருடன் உடலுறவு கொண்டால் தொற்று ஏற்படலாம். நோய்த்தொற்றின் தீவிரம் நபருக்கு நபர் மாறுபடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.