கேரள மாநிலத்தின் அடுத்த முதலமைச்சராக வி.டி.சதீஷன் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) கூட்டணி 140 தொகுதிகளில் 102 இடங்களை வென்று ஆட்சியை கைப்பற்றிய நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் மே 18 ஆம் தேதி அவர் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனநாயக முன்னணி அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்தது. முதல்வர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான வி.டி.சதீஷன் மற்றும் ரமேஷ் சென்னித்தாலா இடையே கடும் போட்டி நிலவியது. மேலும், காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் பெயரும் பரிசீலனையில் இருந்ததாக தகவல்கள் வெளியாகின.
இந்த இழுபறி நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர்களான அஜய் மக்கான் மற்றும் முகுல் வாஸ்னிக் ஆகியோர் கேரள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தை திருவனந்தபுரத்தில் கூட்டி விரிவான ஆலோசனை நடத்தினர். ஒவ்வொரு எம்.எல்.ஏ.விடமும் தனித்தனியே கருத்துக்கள் கேட்கப்பட்டன. இறுதியில், காங்கிரஸ் சட்டமன்றத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான முழு அதிகாரத்தையும் கட்சித் தலைமைக்கு வழங்கும் ஒருமனதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், காங்கிரஸ் சட்டமன்றத் தலைவராக வி.டி.சதீஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கட்சித் தலைமை நேற்று அறிவித்தது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெயராம் ரமேஷ், அஜய் மக்கான், முகுல் வாஸ்னிக், தீபா தாஸ் முன்ஷி ஆகியோர் இந்த தகவலை உறுதிப்படுத்தினர். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து வி.டி.சதீஷனின் ஆதரவாளர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். மே 18 அன்று நடைபெற உள்ள பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.