கேரளா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 102 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி மட்டும் 63 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையாக திகழ்கிறது. கூட்டணி கட்சிகளான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 22 தொகுதிகளிலும், கேரள காங்கிரஸ் (ஜோசப்) 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. மற்ற கூட்டணி கட்சிகளும், சுயேச்சைகளும் கணிசமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
இதற்கிடையே, நீண்ட இழுபறிக்கு பிறகு, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வி.டி.சதீசனை முதல் மந்திரியாக காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது. கவர்னர் ஆர்.வி.அர்லேகரை சந்தித்த சதீசன், பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை அளித்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். கவர்னரும் அதனை ஏற்றுக்கொண்டு அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில், கேரளாவின் புதிய முதல் மந்திரியாக வி.டி.சதீசன் நாளை காலை 10 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்டேடியத்தில் பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பு விழா மிக பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முக்கிய நிகழ்வில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், கர்நாடக முதல்வர் சித்தராமையா, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.