பிரதமர் மோடியை சந்தித்த கேரள முதல்வர் சதீசன்

கேரளாவில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்று, 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, வி.டி.சதீசன் கேரளாவின் புதிய முதல் மந்திரியாக கடந்த 18-ம் தேதி பதவியேற்றார். பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.

முதல் மந்திரியாக பொறுப்பேற்ற பிறகு, வி.டி.சதீசன் முதன்முறையாக டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். டெல்லியில் உள்ள கேரள இல்லத்தில் அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். டெல்லி சென்றடைந்த அவர், சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, கே.சி.வேணுகோபால், பிரியங்கா காந்தி உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்களை நேரில் சந்தித்துப் பேசினார். சட்டசபை தேர்தலில் தனக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த தலைவர்களுக்கு அவர் இந்த சந்திப்பின் போது நன்றி தெரிவித்தார்.

மேலும், முதல்-மந்திரி சதீசன் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, கேரளம் தொடர்பான பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமருடன் விவாதித்ததாக சதீசன் தெரிவித்தார். மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு மத்திய அரசிடம் இருந்து அனைத்து உதவிகளையும் ஆதரவையும் கோரியதாகவும் அவர் கூறினார்.

இந்த சந்திப்பின் போது, கேரளாவின் பாரம்பரிய நடன நாடகமான கதகளியை சித்தரிக்கும் ஒரு சிறிய நடனக் கலைஞரின் சிலையை முதல்-மந்திரி சதீசன் பிரதமர் மோடிக்கு நினைவு பரிசாக வழங்கினார். கேரளாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் வெற்றிக்குப் பிறகு, சதீசன் பிரதமரை சந்தித்தது இதுவே முதல் முறையாகும்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version