கரூர் வழக்கு: ஆதவ் அர்ஜுனா தான் முக்கிய குற்றவாளி – ஆர்.எஸ்.பாரதி

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி

கரூர் சம்பவத்தில் ஆதவ் அர்ஜூனா தான் முக்கிய குற்றவாளி என்றும், அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுகவைச் சேர்ந்த இரண்டு முன்னாள் அமைச்சர்களை ஆளும் கட்சியில் இணைக்கும் விழாவில், அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பொறுப்பற்ற முறையில் பேசியதாகவும், தமிழ்நாட்டு மக்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தும் வகையில் அவர் பேசியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், கரூரில் நடைபெற்ற சம்பவத்தைப் பற்றி ஆதவ் அர்ஜூனா பொய்யாகவும், புரட்டுமாகவும் பேசியுள்ளார் என்றும் ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டுள்ளார். கரூர் சட்டமன்ற உறுப்பினராக அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர் ஆளும் கட்சியில் சேர்ந்துவிட்டதால், அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வர உள்ளது. மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவே ஆதவ் அர்ஜூனா அவ்வாறு பேசியுள்ளார் என அவர் கூறியுள்ளார்.

கரூர் சம்பவத்தின் போது, திமுக தலைவர் தளபதி எடுத்த நடவடிக்கை மனசாட்சி உள்ளவர்களால் பாராட்டப்பட்டது. 41 பேர் இறந்தபோது முகத்தை மூடிக்கொண்டு ஓடி ஒளியாமல், மக்களுடன் துணை நின்று, உயிர்களைக் காப்பாற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுத்த ஒரே தலைவர் தளபதிதான் என்பதை மக்களும், தமிழ்நாடும் மறக்காது என ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தினார்.

கரூர் வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட SIT குழுவின் தலைவர், தற்போது உளவுத்துறை ஐஜி ஆக நியமிக்கப்பட்டுள்ளார். இது, திமுக அரசு நடுநிலையோடு செயல்பட்டதற்கான சாட்சி என அவர் சுட்டிக்காட்டினார். SIT விசாரணை ஒழுங்காக நடைபெற்றபோதும், அவர்கள் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்டதாகவும், தற்போது சிபிஐ விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஆதவ் அர்ஜூனா, சட்டம் தெரியாமல் நீதிமன்ற நடவடிக்கைகளைப் பற்றி பேசியுள்ளார். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணைக்கு விஜய் இரண்டு முறை சென்று வந்துள்ளார். புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், முதல்வரின் தனி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜெகதீஷ், ஆதவ் அர்ஜூனா ஆகியோர் இந்த வழக்கில் குற்றவாளிகளாக உள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடைபெறும்போது, வழக்கின் விசாரணையை கெடுக்கும் வகையில் ஆதவ் அர்ஜூனா பேசியுள்ளார். எனவே, இது குறித்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாகவும், அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடர உள்ளதாகவும் ஆர்.எஸ்.பாரதி அறிவித்தார்.

ஆதவ் அர்ஜுனாவின் ஆட்டம் எல்லை மீறிச் செல்வதாகவும், அவர் யார் என்பது நாட்டுக்குத் தெரியும் என்றும், இந்த நாட்டையே திவாலாக்கும் லாட்டரி குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார். அவரது மனைவி மீதும் கேரளாவில் 928 கோடி ரூபாய் லாட்டரி சீட்டு ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், அவர்களும் இந்த வழக்கில் குற்றவாளிகளாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தனது தொகுதியில் ஆய்வு செய்யச் சென்றபோது கைது செய்யப்பட்டது சர்வாதிகாரத்தின் உச்சம் என்றும், இதை சட்டரீதியாக சந்திப்போம் என்றும் அவர் கூறினார். இந்த அராஜக ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் என்றும், இந்த ஆட்சி எத்தனை நாள் நீடிக்கும் என்பதை பொதுமக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். திமுக என்பது வெட்ட வெட்ட துளிர்க்கும் மரம், அரைக்க அரைக்க மணக்கும் சந்தனம், தீட்ட தீட்ட ஒளிரும் வைரம் என்பதை புதிதாக ஆட்சிக்கு வந்தவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version