கடந்த ஆண்டு கரூரில் நடிகர் விஜய்யின் நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு தமிழக வெற்றிக் கழக அரசு வழங்கிய அரசுப் பணி நியமன ஆணைகளை ரத்து செய்யக்கோரி நாம் தமிழர் கட்சி தொடர்ந்த வழக்கில், மதுரை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வரவேற்றுள்ளார்.
கடந்த செப்டம்பர் 27 அன்று, கரூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் நிகழ்ச்சியில் எதிர்பாராத விதமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த துயர சம்பவத்தில் அப்பாவி பொதுமக்கள் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், சமீபத்தில் ஜூலை 10ஆம் தேதி, கரூரில் பல்வேறு நலத்திட்ட உதவிகளைத் தொடங்கி வைத்த தமிழக முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய், உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசுப் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்த நியமனங்கள் குறித்து நாம் தமிழர் கட்சி ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தது. உயிரிழப்புக்கு காரணமானவர்களைக் கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என்றும், இரவு பகல் பாராமல் TNPSC தேர்வுகளுக்குப் படித்து தயாராகும் போட்டியாளர்களுக்கு இந்த நியமனங்கள் மனச்சோர்வை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் வலியுறுத்தியிருந்தனர். மேலும், இந்த பணி நியமனங்களைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கும் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சுயதொழில் முனைவோராக மாற்ற பயிற்சிகள் வழங்கி உதவலாம் என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சாதாரண பணி என்ற அரசு வாதத்தை ஏற்க முடியாது என்றும், எந்த அரசுப் பணியும் சாதாரணமானதல்ல, அது ஒரு குடும்பத்திற்கு உதவும் பணி என்றும் உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், தினசரி சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்கள் அனைவருக்கும் அரசு வேலை வழங்க இயலாது என்றும், வேலைக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு இது நியாயமில்லை என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த தீர்ப்பை மிகுந்த நிம்மதியுடன் வரவேற்பதாக ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு TNPSC குரூப்-4 தேர்வை சுமார் 20 லட்சம் பேர் எழுதியுள்ள நிலையில், இத்தீர்ப்பின் மூலம் தகுதியானவர்களுக்கு அரசுப் பணிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்திருப்பதாக அவர் கூறினார்.
கரூர் பணி நியமன ஆணைகள் ரத்து செய்யப்பட்டிருப்பது, TNPSC போட்டித் தேர்வுகளுக்குக் கடுமையாகப் படித்துத் தயாராகும் மாணவர்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகவே நான் கருதுகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

