தமிழகத்தில் கருப்பட்டி விலை விண்ணை முட்டும்: மக்கள் அதிர்ச்சி!

தமிழகத்தில் கருப்பட்டி விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.

தமிழகத்தில், குறிப்பாக தென்மாவட்டங்களில் பனைத்தொழில் மற்றும் கருப்பட்டி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பருவநிலை மாற்றத்தால் 'எல்நினோ' பாதிப்புகள் அதிகமாக உணரப்படுவதால், கருப்பட்டியின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி போன்ற மாவட்டங்களில் பனைத்தொழில் பிரதானமாக நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் அதிக பனை மரங்களைக் கொண்ட பகுதியாகும். இங்குள்ள சாயல்குடி, நரிப்பையூர், மாரியூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஆயிரக்கணக்கான பனைத் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்திற்காக பனை மரங்களை நம்பியுள்ளனர். வழக்கமாக ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பதநீர் சீசன் தொடங்கி, பதநீரைக் காய்ச்சி கருப்பட்டியாக தயார் செய்வார்கள். இந்த கருப்பட்டிகளை வியாபாரிகள் மொத்தமாக வாங்கி விற்பனை செய்கின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரிய அளவில் கருப்பட்டிகள் தயாரிக்கப்பட்டாலும், கடந்த ஆண்டின் கருப்பட்டிகளுக்கே அதிக விலையும் சுவையும் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதேபோல், தூத்துக்குடி மாவட்டத்தின் உடன்குடி கருப்பட்டி அதன் தனித்துவத்திற்காக அறியப்படுகிறது. இது சாயல்குடி கருப்பட்டியை விட அதிக விலைக்கு விற்பனையாகிறது. பனங்கற்கண்டு, பனஞ்சுக்கு, சில்லுக் கருப்பட்டி போன்றவையும் பனைத் தொழிலாளர்களால் தயாரிக்கப்பட்டு மக்களால் விரும்பி வாங்கப்படுகின்றன.

இந்த ஆண்டு மழைப்பொழிவு குறைந்ததால் கருப்பட்டி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பனை நாடார் மகாஜன சங்க நிறுவனத் தலைவர் சிலுவை நாடார் கூறுகையில், 'பசுபிக் பெருங்கடலில் ஏற்படும் எல்நினோ தாக்கத்தால் தமிழ்நாட்டில் பருவநிலை மாற்றம் அதிகமாகியுள்ளது. கருப்பட்டி உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களிலும் இதன் தாக்கம் தீவிரமாக உள்ளது. பனை மரங்கள் வளரத் தேவையான மழை சரியாகப் பெய்யாததால், பதநீர் தரும் பனைப் பாலைகள் முழு வளர்ச்சி அடையவில்லை. வழக்கமாக 6 முதல் 7 மாதங்கள் வரை நீடிக்கும் பதநீர் சீசன், தற்போது 4 முதல் 4.5 மாதங்களிலேயே முடிந்துவிடுகிறது. இதனால் பதநீர் உற்பத்தி குறைந்து, கருப்பட்டி உற்பத்தியிலும் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், 'கடந்த காலங்களில் சுமார் ரூ.200 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்பட்ட கருப்பட்டி, தற்போது அதன் விலை ரூ.450 வரை உயர்ந்துள்ளது. உற்பத்தி குறைவு மற்றும் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் கருப்பட்டி வாங்குவதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். அடுத்தடுத்த ஆண்டுகளிலும் எல்நினோ போன்ற பருவநிலை மாற்றங்களின் தாக்கம் தொடர்ந்தால், பனைத் தொழிலும் கருப்பட்டி உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால் பனையேறிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. பருவமழை முறையாகப் பெய்தால் மட்டுமே பனை மரங்களில் போதுமான பதநீர் கிடைக்கும்' என்றும் அவர் வருத்தம் தெரிவித்தார்.

இந்த திடீர் விலை உயர்வு நுகர்வோரை பெரிதும் பாதித்துள்ளது. ஆரோக்கியமான மாற்று இனிப்பாகக் கருதப்படும் கருப்பட்டி, தற்போது எட்டாக்கனியாக மாறி வருகிறது. அடுத்த பருவமழையை நம்பியே பனைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும், கருப்பட்டி உற்பத்தியும் உள்ளது.

பருவநிலை மாற்றத்தின் நேரடி பாதிப்பை பனைத் தொழிலாளர்கள் சந்தித்து வருகின்றனர். கருப்பட்டி உற்பத்தி குறைந்துள்ளதால், அதன் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. இது பொதுமக்களுக்கு அடுத்த ஷாக்காக அமைந்துள்ளது. இந்த நிலை மாறவும், பனைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்படவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பனை மரங்கள் செழித்து வளர்ந்து, பதநீர் உற்பத்தி அதிகரித்து, கருப்பட்டி விலை சீரடைய வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது. இந்த ஆண்டின் உற்பத்தி பாதிப்பு, அடுத்த ஆண்டுகளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் அவசியத்தையும் உணர்த்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version