தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான கார்த்திக் சுப்பராஜ், தனது 10வது மைல்கல் திரைப்படத்திற்கு 'இசைஞானி' இளையராஜா இசையமைக்க உள்ளதாக நெகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார். இது இளையராஜாவின் இசைப் பயணத்தில் 1540-வது திரைப்படமாக அமையவுள்ளது. இந்த அறிவிப்பு சினிமா வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
'பீட்சா', 'ஜிகர்தண்டா', 'இறைவி', 'பேட்ட', 'மகான்', 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ், தனது அடுத்த படத்தை முற்றிலும் சுயாதீன பாணியில் (Independent style) இயக்க உள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே உற்சாகத்தை அளித்துள்ளது.
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய 9 படங்களில், 'பேட்ட' படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்த நிலையில், மற்ற 8 படங்களுக்கு சந்தோஷ் நாராயணனே இசையமைத்திருந்தார். இருப்பினும், கார்த்திக் சுப்பராஜ் தனது படங்களில் இளையராஜாவின் கிளாசிக் பாடல்களையோ அல்லது பின்னணி இசையையோ பயன்படுத்துவதை வழக்கமாக வைத்திருந்தார். ஆனால், தற்போது முதன்முறையாக இளையராஜாவையே தனது படத்திற்கு முழுமையாக இசையமைக்க வைத்துள்ளார்.
இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகும் இந்த படத்திற்கான தலைப்பு மற்றும் நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இளையராஜாவின் இசையில் உருவாகும் மற்றொரு பிரம்மாண்ட படைப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.