சூர்யா மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம், வெளியாகி குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
உலகளவில் ரூ.207 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடி வசூலித்துள்ள இந்தப் படம், விரைவில் ரூ.300 கோடியைக் கடந்து சூர்யாவின் திரைப்பயணத்தில் மிகச்சிறந்த வசூல் சாதனையைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் மட்டுமன்றி உலகளவிலும் பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பதால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளுக்குச் சென்று கொண்டாடி வருகிறார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிடைத்த இந்த பிரம்மாண்ட வெற்றியை பத்திரிகையாளர்களுடன் கொண்டாடிய நடிகர் சூர்யா, ‘கருப்பு’ படம் எடுக்கும் முடிவு அரை மணி நேரத்தில் எடுக்கப்பட்டது என்றும், இது முழுக்க முழுக்க இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி மீது வைத்த நம்பிக்கை என்றும் தெரிவித்தார். இந்த வெற்றிக்குக் காரணமான அனைவருக்கும் நன்றி தெரிவித்த அவர், திரையரங்குகளில் நீண்ட நாட்களுக்குப் பிறகு காணப்படும் இந்த கொண்டாட்டத்தையும் அன்பையும் கண்டு மகிழ்வதாகக் கூறினார்.
மேலும், படத்தின் எடிட்டிங் முடிந்த பிறகு, தனது உதவியாளர் கருப்பசாமி பாடல் இருந்தால் சரியாக இருக்கும் என்று கூறியதால், 5 மாதங்கள் கழித்து அந்தக் பாடல் படமாக்கப்பட்டதாக சூர்யா தெரிவித்தார். பொருட்செலவு உள்ளிட்ட காரணங்களால் வேண்டாம் என்று சொல்லியிருக்கலாம் என்றாலும், சரியாக இருக்கும் என்று நம்பி படமாக்கப்பட்ட இந்தப் பாடல் இன்று திரையரங்குகளில் கொண்டாடப்படுவதில் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தப் படத்திற்காக அனைவரும் சேர்ந்து உழைத்ததை இன்று திரையரங்குகளில் காண முடிவதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் பேசினார்.

