கர்நாடகாவில் மூன்று தமிழர்கள் அம்மாநில வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, தமிழ்நாடு அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக எந்தக் கண்டனமும் வெளியிடப்படாதது அதிர்ச்சியளிப்பதாக தி.மு.க. எம்.எல்.ஏ.வும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சட்டப்பேரவையில் இந்த விவகாரம் தொடர்பாக பதிலளித்த அமைச்சர், கர்நாடகாவின் தரப்பு வாதத்தையே எதிரொலித்தார். தமிழ்நாடு அரசு சார்பிலோ அல்லது முதல்-அமைச்சர் சார்பிலோ கர்நாடக முதல்-மந்திரிக்கு விளக்கம் கேட்டு எந்தக் கடிதமும் இதுவரை எழுதப்படவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "த.வெ.க. தலைவர் என்கிற நிலையில், பட்டும் படாமல் ஒரு அறிக்கையை மட்டும் வெளியிட்டுள்ளனர்" என்று உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இந்தச் சூழலில், சென்னையில் நாளை தென் மாநில முதல்-அமைச்சர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தின் போது, கர்நாடக முதல்-அமைச்சரைச் சந்தித்து, இந்தச் சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் உரிய விளக்கத்தைக் கேட்டுப் பெற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த வழக்கு விசாரணையை கர்நாடக காவல்துறை விசாரிப்பதற்குப் பதிலாக, நம்பகமான நீதி விசாரணை நடத்திட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு கோர வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் நடைபெற்றுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, தேசிய மனித உரிமைகள் ஆணைய வழிகாட்டுதல்கள் மற்றும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகளின் அடிப்படையில், இந்த உயிரிழப்புகளுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்குக் கூடுதல் இழப்பீடு வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு கர்நாடக முதல்-மந்திரிடம் தமிழ்நாட்டு முதல்-அமைச்சர் வலியுறுத்த வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
