கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டி.கே. சிவக்குமாரும் பதவி வகித்து வருகின்றனர். கடந்த 2023-ல் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தபோது, முதல்வர் பதவி பகிர்வு குறித்து பரபரப்பான தகவல் வெளியானது. அதன்படி, இரண்டரை ஆண்டுகள் சித்தராமையாவும், மீதமுள்ள இரண்டரை ஆண்டுகள் டி.கே. சிவக்குமாரும் முதல்வர் பதவியை வகிப்பார்கள் என கூறப்பட்டது.
இந்த அதிகாரப் பகிர்வு தொடர்பாக கட்சிக்குள் தொடர்ந்து புகைச்சல் நிலவி வந்தது. இதுகுறித்து முதல்-மந்திரி சித்தராமையா, 'கட்சி மேலிடத்தின் உத்தரவுக்கு நானும், சிவக்குமாரும் கட்டுப்பட வேண்டும்' என்று கூறியிருந்தார். இந்நிலையில், துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமாருக்கு வழிவிடும் வகையில், முதல்வர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் பரவியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மூத்த எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் தலைவர் ஆர்.வி. தேஷ்பாண்டே கூறுகையில், 'ராஜினாமா செய்ய முடிவு செய்து விட்டேன்' என்று சித்தராமையா தன்னிடம் கூறியதாக தெரிவித்தார். மேலும், 'கட்சியின் மேலிடத்திற்கு நான் வாக்கு கொடுத்துள்ளேன். அதை நான் மதிக்க வேண்டும்' என்று சித்தராமையா கூறியதாகவும், இதனால் நாளை அல்லது நாளை மறுநாள் அவர் ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாகவும் தேஷ்பாண்டே குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கர்நாடக பொதுச்செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, 'இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை' என்று கூறியுள்ளார். இதனால், சித்தராமையாவின் ராஜினாமா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக அரசியல் வட்டாரங்கள் காத்திருக்கின்றன.

