கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததில் இருந்து முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் இடையேயான முதல்வர் பதவி மாற்றம் குறித்த ஒப்பந்தம் விவாதத்தில் இருந்து வருகிறது. 2023-ல் காங்கிரஸ் ஆட்சி அமைந்தபோது, 2.5 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்வர் பதவியை டி.கே.சிவக்குமாருக்கு விட்டுக்கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால், சித்தராமையா பதவியில் கூடுதலாக 6 மாதங்கள் நீடித்தார். இந்த நீட்டிப்புக்குப் பிறகு, ஒப்பந்தத்தின்படி தனக்கு முதல்வர் பதவி வழங்கப்பட வேண்டும் என டி.கே.சிவக்குமார் காங்கிரஸ் மேலிடத்திடம் கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து 5 மாநில தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு முடிவெடுக்கப்படும் என கட்சி மேலிடம் உறுதியளித்திருந்தது.
இந்நிலையில், காங்கிரஸ் மேலிடம் நேற்று முன்தினம் முதல்-மந்திரி சித்தராமையாவை டெல்லிக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. ராகுல்காந்தி, சித்தராமையாவிடம், 'நீங்கள் 2.5 ஆண்டுகளுக்குப் பிறகு டி.கே.சிவக்குமாருக்கு முதல்வர் பதவியை விட்டுக்கொடுப்பதாக உறுதியளித்தீர்கள். ஆனால், உங்களுக்கு கூடுதலாக 6 மாதங்கள் வழங்கியுள்ளோம். எனவே, டி.கே.சிவக்குமார் முதல்-மந்திரி ஆக வழிவிட வேண்டும். உங்கள் மகனுக்கு உரிய பதவி வழங்கப்படும். உங்களையும் உரிய மரியாதையுடன் நடத்துவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்' என்று கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து, முதல்-மந்திரி சித்தராமையா இன்று காலை தனது வீட்டில் அனைத்து மந்திரிகளுக்கும் காலை உணவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த விருந்தின்போது, தனது ராஜினாமா முடிவை அவர் மந்திரிகளிடம் அறிவித்தார். மேலும், விருந்தின்போது, சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் ஒருவரையொருவர் கட்டித்தழுவிக்கொண்டனர். டி.கே.சிவக்குமார், சித்தராமையாவின் கால்களைத் தொட்டு வணங்கினார்.
இன்று பிற்பகல், முதல்-மந்திரி சித்தராமையா கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைத் தொடர்ந்து, கர்நாடக சட்டசபை காங்கிரஸ் கட்சி கூட்டம் நடைபெறும். இதில், டி.கே.சிவக்குமார் கட்சியின் புதிய சட்டசபை குழு தலைவராக, அதாவது முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட உள்ளார். ஓரிரு நாட்களில் அவர் முதல்-மந்திரியாக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. டி.கே.சிவக்குமாரின் அமைச்சரவையில், சித்தராமையாவின் மகன் யதீந்திராவுக்கு துணை முதல்-மந்திரி பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், மேலும் தலித், பழங்குடியினர், லிங்காயத் சமூகங்களுக்கும் துணை முதல்-மந்திரி பதவி வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.