மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகவில்லை என்றால், கரப்பான் பூச்சி கட்சியின் போராட்டம் மேலும் தீவிரமடையும் என அக்கட்சியின் செயற்பாட்டாளர் சவுரவ் தாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும். இல்லையெனில், எங்கள் போராட்டம் தொடரும், மேலும் வீரியம் அடையும். எங்கள் போராட்டத்திற்கு எதிராக முதல் நாளிலிருந்தே எதிர்மறையான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றன. எங்களுக்கு வெளிநாட்டு நிதி வருவதாகவும், ஜார்ஜ் சோரோஸ் நிதி அளிப்பதாகவும் பொய்யான பரப்புரைகள் செய்யப்படுகின்றன. இந்த பரப்புரைகள் எதையும் எங்களை நிறுத்தாது. இந்தப் போராட்டம் கல்வி அமைப்பில் நிலவும் மோசமான நிலைக்கான உண்மைத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டது' என்று அவர் கூறினார்.
மேலும், கரப்பான் ஜனதா கட்சி செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா பேசுகையில், 'நாங்கள் போராட்டக் களத்தை விட்டு திரும்பிப் போக மாட்டோம். இனி அமைதியாகவும் இருக்க மாட்டோம். ஜூலை 20-ம் தேதி காவல்துறையினர் எங்களை நடத்திய விதம் கண்கூடாகப் பார்த்தோம். நாங்கள் எந்த முதல் தகவல் அறிக்கையையும் (எஃப்.ஐ.ஆர்) கண்டு அஞ்ச மாட்டோம். எங்கள் கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால், கோடிக்கணக்கான மக்கள் டெல்லியில் குவிவார்கள்' என்று அவர் தெரிவித்தார். கல்வி அமைப்பில் நிலவும் குறைபாடுகளை சுட்டிக்காட்டி நடத்தப்படும் இந்த போராட்டம், உண்மையை நிலைநாட்டும் என அக்கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

