டெல்லி: ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டியுள்ள நிலையில், இந்த விலை உயர்வால் யாருக்கெல்லாம் லாபம் கிடைக்கிறது என்பதை பிரதமர் நரேந்திர மோடி விளக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். மக்களின் பணம் தவணை முறையில் கொள்ளையடிக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தபோதும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் குறைக்கப்படவில்லை. அப்போது மக்களின் பணம் பகிரங்கமாக கொள்ளையடிக்கப்பட்டதாக கார்கே சுட்டிக்காட்டினார். சமீபத்திய சட்டப்பேரவைத் தேர்தல்கள் முடிந்த உடனேயே மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது. கடந்த 10 நாட்களில் மட்டும் 3 முறை விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இத்தாலி, ஆஸ்திரேலியா, ஜெர்மனி போன்ற நாடுகள் கலால் வரியைக் குறைத்து பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுக்குள் வைத்துள்ளன. பிரிட்டன், அயர்லாந்து போன்ற நாடுகளில் எரிசக்திக்கு சிறப்பு மானிய உதவிகள் வழங்கப்படுகின்றன. ஆனால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் யார் பயனடைகிறார்கள் என்பதை பிரதமர் மோடி விளக்க வேண்டும் என கார்கே வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 15-ம் தேதி, கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் நீண்ட தூரப் போக்குவரத்து செலவுகள் காரணமாக இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு தினசரி ரூ.1,000 கோடி இழப்பு ஏற்பட்டதை ஈடுகட்ட, பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ.3 உயர்த்தப்பட்டது. மேலும், மே 19 அன்று தலா 90 பைசா உயர்த்தப்பட்டது. இதன் விளைவாக, இன்று சென்னையில் பெட்ரோல் விலை 82 பைசா உயர்ந்து ரூ.105.31 ஆகவும், டீசல் விலை 87 பைசா உயர்ந்து ரூ.96.98 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், கடந்த 10 நாட்களில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு சுமார் ரூ.5 வரை உயர்ந்துள்ளது. சிஎன்ஜி விலையும் ஒரு கிலோவுக்கு ரூ.4 அதிகரித்துள்ளது. இருப்பினும், எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து இழப்பை சந்திப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

